இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையானது இந்தியா ஓர் இறையாண்மை கொண்ட சமதர்ம , மதசார்பற்ற மக்களாட்சிக் குடியரசு என குறிப்பிடுகிறது. அத்தகைய மகத்தான அரசியலமைப்பு சட்டத்தையே நாடாளுமன்றத்தில் மிருக பலத்தை வைத்துக் கொண்டு அதிகாரமற்றதாக்கும் வேலையை பிஜேபி செய்து வருகிறது. சட்டத்தின் ஆட்சி என்ற கோட்பாடு தகர்க்கப்பட்டு பாசிச எதேச்சதிகார ஆட்சி இந்தியாவில் அமுலாகி வருகிறது. உச்சமாக இஸ்லாமிய வெறுப்பு அரசியலுக்கு இந்திய நாடாளுமன்றத்தையே பயன்படுத்தும் துணிவு பாஜகவுக்கு வந்துவிட்டது. அத்துணிவின் செயல்வடிவமே குடியுரிமை திருத்தச் சட்டம் 2019. 2016ல் தாக்கல் செய்து, கடும் எதிர்ப்பினை சந்தித்த இச்சட்டத்தை பெரும்பான்மைத் திமிரால் மீண்டும் மசோதாவாக்கி நிறைவேற்றியுள்ளது மோடி அரசு.
சட்டப் பிரிவுகள் 5 முதல் 11 வரை
இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் 5 முதல் 11 வரையில் குடியுரிமை பற்றிப் பேசுகிறது. இதன் வகையங்கள் இச்சட்டம் செயலுக்கு வந்த போது குடியுரிமை பெறுவது பற்றி அதிகம் பேசுவதோடு இது குறித்து நாடாளுமன்றம் சட்டமியற்றிக் கொள்ள அதிகாரம் வழங்கியது.இதனைத் தொடர்ந்து இயற்றப்பட்டதே. ‘இந்தியக் குடியுரிமைகள் சட்டம்’ 1955 ஆகும். இது பிறப்பின் வழி, வம்சாவளி,இயல்புரிமை வழி மற்றும் பதிவின் வழி குடியுரிமை பெறுவதைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும் குடியுரிமையை திரும்பப் பெறுதல் மற்றும் ரத்து செய்தல் பற்றியும் குறிப்பிடுகிறது.இந்தச் சட்டம் இதுவரை ஐந்து முறை திருத்தப்பட்டிருக்கிறது.
2019 திருத்தத்திற்கு முன்பு பிரிவு 2ன் கீழான ‘சட்டவிரோத குடியேற்றம் கொண்டவர்கள்’ என்பவர்கள் கடவு சீட்டு இல்லாமல் மற்றும் சட்டரீதியான ஆவணங்கள் இன்றி இந்தியாவில் நுழைந்தவர்கள் மற்றும் கடவு சீட்டு மற்றும் சட்டப்பூர்வ ஆவணங்களோடு இந்தியாவில் நுழைந்து அனுமதி பெற்ற காலத்திற்கும் மேல் தங்கியுள்ளவர்கள். இவர்கள் இந்தியக்குடியுரிமை பெறத் தகுதியற்றவர்கள். கடவு சீட்டு சட்டம் மற்றும் அயல்நாட்டவர் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள்.
தற்போது சேர்க்கப்பட்டுள்ள திருத்தம் தற்போது குடியுரிமை சட்டப் பிரிவு 2ன் கீழ் சேர்க்கப்பட்டுள்ள விளக்கமானது, 2014 டிசம்பர் 31 அன்றோ அல்லது அதற்கு முன்போ பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் நுழைந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் , பார்சிக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோர் சட்டவிரோத புலம்பெயர்ந்தவர்கள் ஆகமாட்டார் என மேற்கண்டவர்களுக்கு விலக்களித்துள்ளது. மேலும் அவர்களுக்கு இந்திய கடவுசீட்டுகள் சட்டம் 1920 மற்றும் அயல்நாட்டவர் சட்டம் ஆகியவற்றிலிருந்து விலக்களிக்கப்படுகிறது என்கிற வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சட்டவிரோத குடியேற்றம் கொண்டவர்கள் இஸ்லாம் அல்லாத பிற மதத்தவராக இருக்கிற பட்சத்தில் அவர் இந்தியக் குடியுரிமை பெற இயலும். ஏனெனில் அவர்கள் சட்டவிரோதக் குடியேற்றம் கொண்டவராகவே கருத்தப்படப்போவதில்லை. இத்தகைய மத அடிப்படையிலான திருத்தத்திற்கு 2015லிலேயே மத்திய பாஜக அரசு அடிபோட்டுவிட்டது. இதனை நிர்வாக அறிவிப்பாக 2015லேயே மத்திய அரசு அறிவித்து விட்ட சூழ்நிலையில் அதற்கு சட்டத்திறம் கொடுக்கும் வேலையைத் தற்போது செய்துள்ளது.
பிரிவு 6 பி மற்றும் 7டி
மேற்கண்ட பிரிவை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக பிரிவு 6பி சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி மேற்கண்ட நாடு மற்றும் மதத்தை சேர்ந்த சட்டவிரோதக் குடியேற்றம் கொண்டவர்கள் மீது கடவு சீட்டு மற்றும் அயல்நாட்டவர் சட்டங்களின் பேரில் துவங்கப்பட்ட சட்டநடவடிக்கைகள் யாவும் கைவிடப்படவேண்டுமென கூறப்பட்டுள்ளது. வரம்புரையாக இப்பிரிவு மேகாலயா,அசாம் , மிசோரம், திரிபுரா ஆகிய ஆறாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மாநிலங்களுக்குப் பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திருத்த சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட பிரிவு 7டி ஆனது, மத்திய அரசில் பதிவு செய்த வெளிநாடு வாழ் இந்தியர்களது பதிவை ரத்து செய்ய மேலுமொரு காரணத்தை இணைக்கிறது. அதாவது மத்திய அரசு அறிவிப்பில் வெளியிடுகிற ஏதேனுமொரு சட்டத்தை மீறினால் அவர்களது பதிவு ரத்து செய்யப்படும். அவ்வாறு ரத்து செய்யப்படுவதற்கு முன் அவர் தரப்பு வாதம் கேட்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அயல்நாடு வாழ் இந்தியர் பதிவை ரத்து செய்கிற அதிகாரத்தை முழுமையாக மத்திய அரசின் வசம் கொண்டு செல்லும் நடவடிக்கையாக இருக்கிறது. மேற்கண்ட சட்டத்திருத்தத்தை மக்களவையில் அறிமுகப்படுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்டை நாடுகளில் மதசிறுபான்மையினராக இருந்து அச்சுறுத்தலுக்கு உள்ளான மக்களுக்கு இந்த திருத்தச்சட்டம் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறினார். உண்மையில் இந்தச்சட்டம் அவர் குறிப்பிட்டபடி அண்டைநாடுகளின் மதசிறுபான்மையினருக்கானதா அல்லது இந்தியாவில் வாழ்கிற இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் நோக்கம் கொண்டதா என்பதை ஆராய்ந்து அறிய வேண்டியதில்லை. அதேநேரம் இந்த சட்டத் திருத்தம் அரசியலமைப்பு சட்டப்படி செல்லுதன்மை உடையதா என விவாதிக்க வேண்டியுள்ளது.
ஷரத்து 14 என்ன சொல்கிறது?
இந்திய அரசியலமைப்பு சட்டம் ஷரத்து 14 ஆனது சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் சம பாதுகாப்பு என்பதை உறுதி செய்கிறது. இது இந்தியக் குடிமக்கள் அல்லாதோருக்கும் கிடைக்கக் கூடிய அடிப்படை உரிமை. ஆனால் குடியுரிமை திருத்த மசோதா அரசமைப்பின் இந்த அடிப்படை உரிமையை மீறும் வண்ணம் இயற்றப்பட்டுள்ளது. இது சட்டவிரோதக் குடியேற்றம் கொண்ட அனைவருக்கும் சம பாதுகாப்பை வழங்கவில்லை; மற்றும் அனைவரையும் சமமாகவும் நடத்தவில்லை. சட்டத்தின் அடிப்படையில் வகைப்படுத்தல் செய்ய நியாயமான பாகுபாடு (Reasonable Clasiification) கோட்பாட்டினைக் கொண்டு பாகுபாடு நியாயமென நிறுவ வேண்டும். இந்தத் திருத்தமானது நான்கு விஷயங்களின் அடிப்படையில் சட்டவிரோதக் குடியேற்றம் கொண்டவர்களைப் பிரிக்கிறது
தேசத்தின் அடிப்படையில், மற்றும் 2 மதத்தின் அடிப்படையில்
தேசம் என்கிற வகையில் குறிப்பிட்ட மதத்தை தமதாகக் கொண்ட நாடுகள் என்கிற அடிப்படையிலும் வரலாற்று ரீதியில் இடம்பெயர்வு நடந்த இடங்கள் என்கிற அடிப்படையிலும் அண்டை நாடுகள் என்ற அடிப்படையிலும் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனில் இந்தியாவோடு எல்லையைப் பகிர்ந்து கொள்கிற ஒரு மதத்தை தமதாக கொண்ட மதப் பெரும்பான்மையினரை கொண்ட வரலாற்று ரீதியில் இடம்பெயர்வுகள் நடந்து கொண்டிருக்கிற இலங்கை, மியான்மர், நேபாளம் ஆகிய நாடுகளை சேர்க்காதது ஏன்? இலங்கையில் மத ரீதியிலும் மொழி ரீதியிலும் தமிழர்கள் சிறுபான்மையினர் தானே. பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானில் அஹமது முஸ்லிம்கள் சிறுபான்மையினராக ஒடுக்கப்படுபடுபவர்கள் எனும் பொழுது அவர்கள் ஏன் இச்சட்டத்தில் சேர்க்கப்படவில்லை?
குடியேறிய நாளின் அடிப்படையில்
மேலும் 2014 டிசம்பர் 31 அன்று அல்லது அதற்கு முன்பு என்கிற வகைப்பாடு எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
சட்டவிரோதக் குடியேற்றம் கொண்டவர்கள் வாழ்கிற பகுதியின் அடிப்படையில்
இந்த வகைப்பாட்டில் ஆறாவது அட்டவணையில் வருகிற மாநிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இம்மாநிலங்களை தனிப் பட்டியலில் வைத்ததற்கு காரணம் பழங்குடி மக்கள் மீது சிறப்பு கவனத்துடன் அவற்றின் முன்னேற்றத்திற்கு வழிகோலுவது தான். அங்கே இருக்கிற கட்டுப்பாடுகள் இந்தியக் குடிமக்களுக்கும் பொருந்தும் எனும்போது அங்கிருந்த மக்களை வசிப்பிட அடிப்படையில் பிரிப்பது அர்த்தமற்றது மட்டுமல்ல. பழங்குடியின மக்கள் வாழ்வுரிமைக்கு எதிரானதும் ஆகும். ஆக இங்கு மனிதர்கள் மத்தியில் நியாயமான வகைப்படுத்தல் கோட்பாடு செய்யப்படவில்லை என்பது தெளிவு.மேலும் நல்லெண்ணம் தாண்டிய உள்நோக்கம் இச்சட்டத்திருத்தத்தின் பின் உள்ளது. கேசவனந்தபாரதி வழக்கு தொடங்கி அருணாராய் வழக்கு மற்றும் பிரவீன் பாய் தொகாடியா வழக்கு வரை முகப்புரை வாசகங்கள் அரசமைப்பின் அடிப்படை என்றும் அதனை மீறும் சட்டங்கள் செல்லுதன்மையற்றவை என்றும் நிறுவப்பட்டுள்ளது. முகப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள அரசமைப்பின் அடிப்படை அம்சமான மதச்சார்பின்மையை அழிக்கிற, இந்தியாவை மெல்ல மெல்ல இந்து நாடாக்க முயற்சிக்கிற, இஸ்லாமிய வெறுப்பை விதைக்கிற இந்த சட்டத் திருத்தம் இல்லாநிலையது. எனவே சட்டப்படி இது செல்லத்தக்கதல்ல.