weather

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை:
நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு பருவமழை தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் தற்போது பரவலாக பெய்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக ஆங்காங்கே சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது.அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை(ஜூலை 17) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.  சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அதிகபட்சமாக வால்பாறை, சின்னக்கல்லார், பந்தலூரில் தலா 9 செ.மீ மழை பதிவானது. 3 நாட்களுக்கு கேரளா, கர்நாடகாவை ஒட்டியுள்ள அரபிக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

;