செங்கல்பட்டு,மார்ச் 10- தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் வசிக்கும் தலித் மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவின் விவரம் வருமாறு:- செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டத்திற்குட்பட்ட நெல்லிக்குப்பம் ஊராட்சி பிரதான சாலையில் மாநில தொல்லியல் துறை பராமரிப்பின் கீழ் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கல்தூண்கள் கொண்ட மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை சுற்றியுள்ள 3 தெருக்களில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் தலித் மக்கள் வசித்து வருகின்றனர். மத்திய அரசின் தொல்லியல் துறை கடந்த 2010 ஆம் ஆண்டு புராதன சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவந்தது. இதன் மூலம் புராதன சின்னங்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து 300 மீட்டர் தூரத்திற்கு புதிய கட்டங்கள் கட்டவும், மின் இணைப்புப் பெறவும், பட்டா வழங்கவும் தடை விதித்தது. இதனால் இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்கவும், மின் இணைப்பு பெறவும், முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறையின் தென்மண்டல கண்காணிப்பாளர் தொல்லியல் துறையின் ஆட்சேபனைக்குரிய பகுதியில் மின் இணைப்பு பெறுதல், குடிநீர் இணைப்பு பெறுதல், பெயர் மாற்றம் செய்தல், பட்டா வழங்குதல் ஆகியவற்றிற்கு எந்த தடையும் இல்லை. மேலும் தொல்லி யல் துறையிடம் இருந்து ஆட்சேபனை யில்லா கடிதம் பெற்றுத்தர வேண்டிய அவசி யம் இல்லை என்றும் உத்தரவிட்டிருந்தார். தொல்லியல் துறையின் தடையாணை யால் பாதிக்கப்பட்ட திருப்போரூர் மற்றும் தண்டலம் பகுதியில் பல ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்சனை இதன் மூலம் முடிவுக்கு வந்தது. தற்போது அனைத்து தரப்பு மக்களுக்கும் அப்பகுதியில் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விதிமுறைகளை பயன்படுத்தி திருப்போரூர் ஒன்றியம், நெல்லிக்குப்பம் ஊராட்சியில் ஆதி திராவிட மக்கள் கிராமநத்தம் வகைப் பாட்டில் நீண்டகாலமாக குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.