ஸ்ரீநகர், அக்.3- காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்கப்படுவார்கள் என்று ஆளுநரின் ஆலோசகர் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து சிதைத்தது. மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தையும் ரத்து செய்தனர். இதற்கு அந்த மாநில அரசியல் கட்சித் தலைவர்களும் இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்குவதற்காக மாநிலம் முழுவதும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, மாநிலமே சிறைச்சாலையாக காணப்பட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அவர்களை மற்ற மாநில அரசியல் கட்சித் தலைவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தலைவர்களை பார்ப்பதற்குச் சென்ற அரசியல் கட்சிகளின் தேசிய தலைவர் களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் யூசுப் தாரிகாமியை பார்க்க கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகே அங்கு செல்ல முடிந்தது. இந்நிலையில் 50 நாட்களுக்கும் மேலாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் அரசியல் தலைவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஜம்மு- காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகர் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்பட 400-க்கும் மேற்பட்ட அரசியல் பிரமுகர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.