வேலூர், ஜூன் 22- ராணிப்பேட்டை சிப்காட்டில் பராமரிப்பில்லாமல் இடிந்து விழும் நிலையில் உள்ள தொழிலாளர் குடியிருப்புகளை உலக வங்கிக் குழுவினர் ஆய்வு செய்தனர். ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டை 1974ஆம் ஆண்டு சுமார் 1089.82 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பேஸ் 1, பேஸ் 2, பேஸ் 3 மற்றும் 2 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என மிகப் பெரிய தொழிற்பேட்டையாக உருவெடுத்தது. இந்த தொழிற்பேட்டையில் தோல் பதப்படுத்துதல் மற்றும் தோல் பொருள்கள் தயாரித்தல், பொறியியல் துறை சாதனங்கள் தயாரித்தல், ரசாயனத் தொழிற்சாலைகள், மருந்து உற்பத்தி, வாகன உதிரிபாகங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பெரியதும், சிறியதுமாக 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜாபேட்டை மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். சிப்காட் நிர்வாகம் சார்பில் சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் எதிரே சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையின் அருகில் 3 அடுக்குகள் கொண்ட 132க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கும் வகையில் 15 குடியிருப்புகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இந்த குடியிருப்பு கட்டடங்கள் பொதுப்பணித் துறையால் கட்டப்பட்டு வாடகை பெற்று பராமரிக்கும் பொறுப்பு சிப்காட் திட்ட அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த குடியிருப்புகளில் தொழிலாளர்கள் வாடகைக்கு தங்கியிருந்தனர். நாளடைவில் சிப்காட் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தொய்வு காரணமாக பல தொழிற்சாலைகள் இயங்கவில்லை. இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு போதிய வேலை வாய்ப்புகள் இல்லாமல் போனது. இதனால் தொழிலாளர்கள் வாடகையைச் செலுத்த முடியாமல் சிரமப்பட்டனர். இதையடுத்து பலர் தங்கள் குடியிருப்புகளைக் காலி செய்து விட்டு சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்ந்தனர். இதனால் பல குடியிருப்புகள் பயன்பாடின்றி மூடியேக் கிடந்தன. தொடர்ந்து சிப்காட் திட்ட அலுவலகம் மேற்கண்ட குடியிருப்புகளை சரிவர பராமரிக்காமல் கிடப்பில் போட்டது. இதனால் அனைத்து அடுக்குமாடிக் குடியிருப்புகளும் பாழடைந்து சிதைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. இந்தக் குடியிருப்புகளில் உள்ள சில குடும்பத்தினரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். 45 ஆண்டுகள் பழமையான தொழிலாளர் குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய குடியிருப்புகள் கட்ட சிப்காட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) நிர்வாக இயக்குநர் எஸ்.அனீஷ் சேகர் தலைமையில், உலக வங்கிக் குழுவினர் சிப்காட்டில் இடிந்து விழும் நிலையில் உள்ள தொழிலாளர் குடியிருப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பழுதடைந்த குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான நிதியை உலக வங்கிக் குழுவிடம் கேட்டுப் பெற்று பணிகளைத் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.