tamilnadu

img

அரசு மருத்துவர் சங்கத் தலைவர் மறைவு: ஸ்டாலின், முத்தரசன் இரங்கல்

சென்னை,பிப்.8- அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் மருத்துவ பேராசிரியர் லட்சுமி நரசிம்மனின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் (52) மாரடைப்பால் பிப்.7அன்று சேலம் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவு குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் திடீரென்று மரணமடைந் தார் என்ற அதிர்ச்சி செய்தி கேட்டு சொல்லொணாத் துயரமுற்றேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பணியில் சேவையாற்றி வந்த லட்சுமி நரசிம்மன், அண்மையில் 7 நாட்கள் நடந்த மருத்துவர்களின் காலவரையற்ற போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர்களில் முக்கியமானவர். போராட்டத்தில் ஈடுபட்ட 120 மருத்துவர்களை அநியாயமாகத் தொலைதூரத்துக்கு இடமாற்றம் செய்தது அதிமுக அரசு. அதில் தருமபுரி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய லட்சுமி நரசிம்மன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வந்த அவர்  மறைந்திருப்பதற்கு அதிமுக அரசே முழு காரணம். அதிமுக அரசின் இந்த அராஜகத்தையும் அடக்குமுறைகளையும் மருத்துவர்களின் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது. லட்சுமி நரசிம்மனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக மருத்துவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன்,“அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர், டாக்டர் என். லட்சுமி நரசிம்மன் மாரடைப்பால் திடீரென இயற்கை எய்தியது அதிர்ச்சியளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது துணைவியார் அனுராதா, அவரது மகன்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்து இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். மருத்துவத் துறை பிரச்சனைகள் தொடர்பாக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன். முற்போக்கு சிந்தனையாளர். மக்கள் நலனில் அக்கறை கொண்ட மனித நேய மிக்க மருத்துவர். மக்களின் பேரன்பை பெற்றவர். அவரின் திடீர் மறைவு தமிழக அரசு மருத்துவர்களுக்கும், தமிழக பொது சுகாதாரத் துறைக்கும் மிகப் பெரிய இழப்பாகும்” என்று தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சமூக  சமத்துவத்திற்கான  டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் கூறுகையில்,அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் என்.லட்சுமி நரசிம்மன் அவர்களின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இந்த  இறப்பிற்குப் பிறகாவது,தமிழக அரசு தனது பழிவாங்கும் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். அனைத்து பழிவாங்கல் நடவடிக்கைகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்றார்.