tamilnadu

img

சாலையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்ட எதிர்ப்பு

ராணிப்பேட்டை, பிப்.19- ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே மத்திய அரசு நிறுவனமான பாரத மிகு மின் நிறுவன தொழிற்சாலை (பெல்) அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலை அருகில்  லாலாபேட்டை, முகுந்த ராயபுரம், சீக்கராஜபுரம், தக்கான் பாளையம், ஏகாம்பர நல்லூர், பள்ளேரி, வசூர், கொண்ட குப்பம், கத்தாரி குப்பம், மருதம் பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது.   இந்த கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலையை பெல் நிறுவனம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஆக்கர மித்து, லாலாபேட்டை கிராம சுடுகாடு, அரசு நீர்நிலைகளை சுற்றி சுற்றுச்சுவர் கட்டும் பணியை துவக்கியுள்ளது.  பெல் நிறுவனத்தின் இந்த அராஜக செயலை கண்டித்து கிராம மக்கள் சார்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் பெல் நிறுவன அதிகாரிகளுக்கு  கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இதனைத் தொடர்ந்து  லாலாபேட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் லாலாபேட்டை சாவடி திடலில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இவர்களுக்கு ஆதரவாக வணிகர்கள் கடையை அடைத்தனர். மறியலில் ஈடுபட்டவர்களை சிப்காட் காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில்  அடைத்தனர். இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எல்.சி.மணி கூறுகையில், ‘ தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு பொதுமக்களின் தினசரி பயன்பாட்டிலுள்ள பாதையை மறைக்கும் சுற்றுச்சுவர் கட்டுவதை கைவிட வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட சுடுகாடு மற்றும் அரசுக்குச் சொந்தமான நீர்நிலைகளை மீட்க வேண்டும்’ எனக் கூறினார்.