tamilnadu

img

தந்தை-மகள் வெட்டிக் கொலை: வேலூரை அதிரவைத்த கொடூரம்...

வேலூர்:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே  வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த தந்தை, மகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியை அடுத்துள்ள ஜார்தான் கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (45). இவரது மனைவி பாஞ்சாலை. இவர்களது பத்து வயது மகள் தீபா. வேப்பங்குப்பம் அடுத்துள்ள ரங்கன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்ஷர்பாஷா. இவரது விவசாய நிலத்தில்தான் கடந்த 15 ஆண்டுகளாக பொன்னுசாமி வேலை செய்துவந்தார். நிலத்தில் உள்ள சிறிய வீட்டில், தன் மனைவி மகளுடன் பொன்னுசாமி தங்கியிருந்தார்.இந்தநிலையில், இரவு வழக்கம்போல் மனைவி, மகளுடன் உறங்கிக் கொண்டிருந்த பொன்னுசாமி, கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத் தில் பிணமாகக் கிடந்தார். அருகில், அவரது மகள் தீபாவும் பலத்த வெட்டுக்காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். கணவனும், மகளும் பிணமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பாஞ்சாலை, அருகில் உள்ள பகுதிக்கு ஓடிச்சென்று உதவிக்கு சிலரை அழைத்துள்ளார்.

அப்பகுதி மக்கள் வந்து பார்த்துவிட்டு, உடனடியாக வேப்பங் குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் நடந்த பகுதிக்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.டி.ஐ.ஜி காமினி, எஸ்.பி செல்வகுமார் ஆகியோரும் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.இதுகுறித்து, வேலூர் எஸ்.பி செல்வகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், `` கொலையாளியை நெருங்கிவிட்டோம். கைது நடவடிக்கை மேற்கொண்ட பின்னர் மற்ற தகவல்களை தெரிவிக்கிறோம்’’ என்றார்.