வேலூர், மே 24-அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சா.ஜெகத்ரட்சகன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை 3,28,956 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் சா.ஜெகத்ரட்சகன், அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, அமமுக சார்பில் என்.ஜி.பார்த்தீபன், மக்கள் நீதி மய்யம் சார்பில் என்.ராஜேந்திரன் உள்ளிட்ட 19 பேர் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி வாலாஜாபேட்டை அருகே உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. திமுக வேட்பாளர் சா.ஜெகத்ரட்சகன் 6,72,190 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இத்தொகுதியில் நோட்டாவுக்கு 12,169 வாக்குகள் கிடைத்தது. .திமுக வேட்பாளர் 3 லட் சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து ராணிப்பேட்டையில் திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர். வாக்கு எண்ணும் மையத்தின் முன் திரண்டிருந்த திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். தொடர்ந்து வேலூர் திமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும், ராணிப்பேட்டை எம்எல்ஏவுமான ஆர்.காந்தி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.