tamilnadu

img

இந்நாள் ஜுன் 16 இதற்கு முன்னால்

1963 - விண்வெளிப் பயணம் மேற்கொண்ட உலகின் முதல் பெண்ணான வாலண்டினா தெரஸ்கோவா-வை வோஸ்டாக்-6 விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பியது சோவியத் ஒன்றியம். இரண்டு நாட்கள், 22 மணிநேரம், 50 நிமிடங்கள் விண்வெளியிலிருந்த வாலண்டினா, 48 முறை புவியைச் சுற்றிவந்தார். அதுவரை அமெரிக்க விண்வெளி வீரர்கள் மேற்கொண்டிருந்த மொத்த விண்வெளிப் பயண நேரத்தைவிட இது அதிகம். இன்றுவரை தனியாக விண்வெளிப் பயணம் மேற்கொண்ட ஒரே பெண் வாலண்டினாதான். விண்வெளிப் பயணம் மேற்கொண்ட ராணுவம்சாராத(சிவிலியன்) முதல் மனிதருமான வாலண்டினா, விண்வெளி வீரராவதற்காக, விமானப்படையில் கவுரவ உறுப்பினராக இணைத்துக்கொள்ளப்பட்டார். நெசவுத் தொழிற்சாலை ஊழியராக இருந்து, விண்வெளிப் பயணத்திற்கு விண்ணப்பித்து, 400 பேரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் வாலண்டினா. இப்பயணத்தின்போது வாலண்டினா எடுத்த படங்களே வளிமண்டலத்திலுள்ள தூசுப்படல அடுக்குகளை அடையாளம்காண பின்னாளில் உதவின. ஏற்கெனவே விண்வெளிப்பயணம் மேற்கொண்டவரான ஆண்ட்ரியான் நிக்கோலாயேவ் என்பவரை 1963இல் வாலண்டினா திருமணம் செய்துகொண்டார். 1964இல் இவர்களுக்குப் பிறந்த குழந்தையே, தாய்-தந்தை இருவரையும் விண்வெளிவீரர்களாகக்கொண்ட முதல் குழந்தையாகும். வாலண்டினா தற்போதைய ரஷ்யப் பாராளுமன்ற(டூமா) உறுப்பினராக உள்ளார். விண்வெளிக்கு முதல் பெண்ணை மட்டுமின்றி, முதல் மனிதரை அனுப்பியதும் சோவியத் ஒன்றியம்தான். 1957இல் உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்-1ஐ அனுப்பியதுடன், விண்ணிலிருந்து முதலில் சமிக்ஞைகளைப் பெற்ற நாடாகவும் சோவியத் மாறியது. ஸ்புட்னிக்-2இல் லைக்கா என்ற நாயை அனுப்பி, விண்வெளிக்கு உயிரினத்தை அனுப்பிய முதல் நாடாகியது. சோவியத்தின் லூனா-2தான் நிலவினை அடைந்த முதல் விண்கலம். லூனா-3தான் நிலவின் எதிர்ப்பகுதியை படமெடுத்த முதல் விண்கலம். 1960இல் ஸ்ட்ரெல்க்கா, பெல்க்கா என்ற இரு நாய்களை விண்வெளிக்கு இட்டுச்சென்று பாதுகாப்பாக புவிக்குக்கொண்டுவந்தது ஸ்புட்னிக்-5. ஸ்ட்ரெல்க்காவின் குட்டிகளில் ஒன்று ஜேக்குலின் கென்னடிக்குப் பரிசளிக்கப்பட்டது. 1961 ஏப்ரலில் முதல் மனிதராக யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்று திரும்பியது உட்பட, விண்வெளி ஆய்வில் சோவியத்தின் முன்னேறிய நிலையே நிலவுக்கு மனிதனை அனுப்புவுதாக அமெரிக்காவை அறிவிக்கச்செய்தது.

-அறிவுக்கடல்