tamilnadu

img

மரக்காணம் கள்ளச்சாராய பலி: 12 பேர் மீது கொலை வழக்கு!

மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 12 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 70க்கும் மேற்பட்டோருக்கு கடந்த 13-ஆம் தேதி திடிரென வாந்தி,மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டு, புதுவை, மரக்காணம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இவர்களில் 14 பேர் உயிரிழந்தனர்.

மரக்காணத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். கள்ளச்சாராயம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, சிபிசிஐடி டிஐஜி ஜோஷி நிர்மல் குமார் தலைமையில் விழுப்புரம் மாவட்ட விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதியும் செங்கல்பட்டு அதிகாரியாக மகேஸ்வரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில், விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஏடிஎஸ்பி கோமதியிடம் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்தார்.ஆவணங்களின் அடிப்படையில் விரைவில் சிபிசிஐடி விசாரணை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 12 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரசாயன ஆலை உரிமையாளர்கள் 12 பேர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.