திண்டிவனம் அருகே இருளர் இனத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவனை சாதிப் பெயர் சொல்லி தீயில் தள்ளி கொள்ள முயன்றதாக சிறுவனின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த காட்டுச்சிவிரி பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது 11 வயது மகன் அதே பகுதியில் உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
ஒரு மாதத்திற்கு முன்னதாக சிறுவன் பள்ளிக்கு போகும்போது சாதிப் பெயரை சொல்லி அழைத்து அவமானம் செய்துள்ளனர். இதுதொடர்பாக சிறுவன் அவரது தந்தையிடம் தெரிவித்ததை அடுத்து பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை சிறுவன் தன்னுடைய வீட்டிலிருந்து அருகிலுள்ள பாட்டி வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது கருமகாரிய கொட்டகை அருகே நின்று கொண்டிருந்த 3 மாணவர்கள், சிறுவனை அழைத்து அங்கு எரிந்து கொண்டிருந்த தீயில் திடீரென தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு வந்த சிறுவனின் உடலில் அதிக அளவில் காயம் இருந்ததால் இதுகுறித்து பெற்றோர் விசாரித்துள்ளனர்.
இதையடுத்து மணம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைதொடர்ந்து தீயில் தள்ளிவிட்ட 3 மாணவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கன்னியப்பன் வெள்ளிமேடுபேட்டை காவல்நிலையத்தில் சிறுவனின் தந்தை புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர்கள் மத்தியில் சாதி உணர்வு மேலோங்கி வருவது கவலையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.