வெகுஜன அமைப்புகள் அழைப்பு
சென்னை,மார்ச் 13- குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகிய அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச் 23 மாவீரன் பகத்சிங் நினைவுநாளில் உரிமை முழக்கப் போராட்டத்திற்கு சிஐடியு, விவசாய இயக்கங்கள், வாலிபர்,மாதர் ,மாணவர் இயக்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதுதொடர்பாக வெள்ளியன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு), அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளின் தமிழ் மாநில தலைவர்களின் கூட்டம் மார்ச் 13 வெள்ளியன்று சென்னையில் சிஐடியுவின் மாநில தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை கூறுகளை தகர்த்து மதச்சார்பற்ற குடியரசு என்பதற்கு பதிலாக இந்துராஷ்டிரம் எனும் தனியரசாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு தீவிரமாக செயல்படுகிறது. நவீன தாராளமயமாக்கல் கொள்கையை மிகத் தீவிரமாக அமல்படுத்தும் நோக்கத்தில் மக்களுக்கு விரோதமான பல்வேறு அம்சங்களைக் கொண்ட வரவு- செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. தனியார் மயத்தை தீவிரப்படுத்துவதுடன், பொதுவிநியோகத் திட்டத்திற்கான நிதியை குறைத்திருப்பது, 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி குறைப்பு, உரத்திற்கான மானியம் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாக்கவும், அரசியல் சாசனத்திற்கு விரோதமான சிஏஏ,என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றை ரத்து செய்யவும், மக்கள் நல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை அதிகப்படுத்திடக் கோரி சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் கூட்டாக தங்களது வலுவான எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் இந்திய புரட்சியின் அடையாளமாகவும், உந்து சக்தியாகவும் விளங்கும் மாவீரன் பகத்சிங்கின் நினைவு நாளான மார்ச் 23 அன்று நடைபெற உள்ள போராட்டத்தில் மக்கள் பங்கேற்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.600 நிர்ணயம் செய்ய வேண்டும். அபரிமிதமான விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ரயில்வே, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். அனைவருக்கும் சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை வழங்க சட்டமியற்ற வேண்டும். வேலையில்லா கால நிவாரணமாக இளைஞர்களுக்கு மாதம் ரூ.7000 வழங்க வேண்டும். வேளாண் விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவீதம் உயர்த்தி விலை தீர்மானிக்க வேண்டும். விவசாயிகளையும், விவசாய தொழிலாளர்களையும் கடனிலிருந்து விடுவிக்க வேண்டும். 60 வயதான விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.6000 பென்சன் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதுடன் ஊழல் இல்லாமல் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். பொதுவிநியோக திட்டத்தை செம்மையாக அமல்படுத்த வேண்டும். வன உரிமைச் சட்டம் 2006 - ஐ கறாராக அமல்படுத்த வேண்டும்.பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும். புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய மையங்களில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும்.
இந்த உரிமை முழக்கப் போராட்டத்தில் அனைத்துப்பகுதி மக்களும் ஆயிரமாயிரமாய் பங்கேற்று வெற்றியடைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், அகில இந்திய விவசாயத்தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம், ஜனநாயக மாதர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாணவர் சங்க மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.