விருதுநகர்:
தனியார் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் முறைகேடாக போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்து வருவதாகவும், அவற்றை தடுத்து நிறுத்த வேண்டுமென அதில் முதலீடு செய்த பாலிசிதாரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து அம்மனுவில் கூறியதாவது: பி.ஏ.சி.எல் என்ற நிதி நிறுவனத்தில் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை தவணைமுறையில் செலுத்தி வந்தோம். விவசாய பண்ணைகளில் அப்பணத்தை முதலீடு செய்வதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி விருதுநகர மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வாங்கப் பட்டன. இந்நிலையில், அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கி வைக்கப்பட்டன. இந்நிலையில், பாலிசிதாரர்களுக்கு நிலங்களை விற்று பணத்தை தர வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சங்கரபாண்டியபுரம், சேர்வைக்காரன்பட்டி, கரிசல்பட்டி, சுப்பையாபுரம், நல்லி, அம்மாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள நிலங்களை சார்பதிவாளர்கள் மற்றும் நில மோசடி விற்பனைக் கும்பல்கள் இணைந்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.