tamilnadu

அருப்புக்கோட்டை நகராட்சி தூய்மைக் காவலர்கள் போராட்டம்

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் ஒப்பந்தக்காரர் மூலம் பணி செய்யும் தூய்மைக் காவலர்களுக்கு மாதச் சம்பளம் வழங்காததைக் கண்டித்துநகராட்சியின் முன்பு தூய்மைக் காவலர்கள் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
நகராட்சியில் துப்புரவுப் பணிகளை செய்ய மனோஜ்குமார் என்பவர் ஒப்பந்தம் எடுத்துள்ளார். இந்த ஒப்பந்தத் தில் அருப்புக்கோட்டை நகராட்சியில் துப்புரவுப் பணி செய்ய 90-க்கும் மேற்பட்டோரை நியமனம் செய்து பணி செய்து வருகிறார்.

இவர் தூய்மைக் காவலர்களுக்கு மாதசம்பளம் நாளொன்றுக்கு ரூபாய் 215 வரை கொடுக்கப் படுவதாக கூறப்படுகிறது.மாவட்ட ஆட்சியர் துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூபாய் 385 வரை சம்பளம் நிர்ணயம் செய்து அறிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் தூய்மைக் காவலர்களுக்கு முழுமையான சம்பளம் வரவில்லை.  சம்பள வங்கிக் கணக்குகளின் பாஸ்புக் வழங்கப்படவில்லை எனத் துப்புரவுப் பணியாளர்கள் தெரிவித்தனர்.சம்பள வங்கி பாஸ்புக், மாவட்ட ஆட்சியர் அறிவித்த முழுமையான சம்பளம் நிலுவையில் உள்ள ஆகஸ்ட்,   செப்டம்பர் மாத சம்பளம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வலியுறுத்தி நகராட்சி முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு  சிஐடியு கன்வீனர் பி. முத்துசாமி  தலைமையேற்றார். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறைஊழியர் சங்கத்தின்  ஆர்.பாலசுப்பிரமணியன்  துவக்கி வைத்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.சந்திர மோகன்,  சிஐடியு மாவட்ட உதவி செயலாளர் எம்.அசோகன் பேசினர்.  இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் எஸ்.காத்தமுத்து உட்படபலர் பங்கேற்றனர்.  நகராட்சி ஆணையாளர் அசோக்குமாருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடனடியாக ஊதியம் வழங்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து  போராட்டம் முடிவுக்கு வந்தது.