மழையால் வாக்குப் பதிவு சதவீதம் குறையும் என வேட்பாளர்கள் கவலை
விழுப்புரம், அக். 19- விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் திங்கட்கிழமை (அக். 21) நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள 103 ஊராட்சி பகுதிகளிலும் நடைபெற்று சனிக்கிழமை மாலை 5 மணியோடு நிறைவடைந்தது. கடந்த 3ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை வேட்பாளர், கட்சியினர் மழை இல்லாததால் அனல்பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். ஆனால் கடந்த 14ஆம் தேதியிலிருந்து தொகுதி முழுவதும் பரவலாக தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அவ்வப்போது பிரச்சாரம் தடைபட்டது. வானிலை ஆய்வு மையமும் மழை தொடரும் என தெரிவித்துள்ளது. தேர்தல் நடக்கும் திங்கட்கிழமையன்றும் இதேபோல் தொடர்ந்து மழை பெய்தால் வாக்காளர்கள் வாக்கு சாவடிக்கு வாக்களிக்க வரமட்டார்கள். இதனால் வாக்குப் பதிவு சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. இதனால் தங்கள் வெற்றி பாதிக்கப்படுமோ என வேட்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மாணவர்களுக்கு குட்கா விற்ற 2 பேர் கைது
மாதவரம், அக்.19- மாதவரம் பேருந்து நிலையம் அருகில் தடை செய்யப்பட்ட மாவா, குட்கா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறை உதவி ஆய்வாளர் கோபிநாத் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது பேருந்து நிலையம் அருகில் சந்தேகப்படும்படியாக 2 பேர் நின்று கொண்டிருந்ததை பார்த்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அவர்கள் மாதவரம் உடையார் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் ரோகித்பாண்டி என்பது தெரியவந்தது இவர்கள் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு மாவா, குட்கா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது இவர்களிடம் சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள குட்கா மாவா செய்யும் மூலப்பொருட்களையும் மாவா பொட்டலங்களை யும் பறிமுதல் செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
தலைமை ஆசிரியர் மீது காவல் துறையில் புகார்
திருவண்ணாமலை, அக். 19- திருவண்ணாமலை நகரம் பெரியார் சிலை அருகே, ஆரம்பப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து மனு அளித்தனர். அந்த மனுவில், மாணவிகளிடம் தலைமைஆசிரியர் பாலியல் ரீதியாக, தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், அவர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர்.