tamilnadu

img

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்

விழுப்புரம்.மே 7- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ரயில்வே மேம்பால கீழ் பகுதியில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் ஆட்சியர் சுப்பிரமணியத்தை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.அந்த மனுவில், நாங்கள் திண்டிவனத்தில் 35 ஆண்டுகளாக நகராட்சிக்கு வாடகை செலுத்தி கடைகளை நடத்தி வருகிறோம். எங்களுக்கென்று தனியாக இடம் இல்லை. புதிய பேருந்து நிலையம் கட்டும்போது மாற்று இடம் வழங்கப்படும் என்று அரசு அதிகாரிகள் உறுதியளித்தார்.அதுவரை போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாதவாறும், ஆக்கிரமிப்பு செய்யாமலும் வியாபாரம் செய்ய ஏதுவாக அனுமதி அளித்தனர். இதனால், திண்டிவனம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ்பகுதியில் அமர்ந்து வியாபாரம் செய்து வருகிறோம். ஆனால், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறோம் என்று கூறி அடிக்கடி எங்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். எனவே நாங்கள் நிரந்தரமாக வியாபாரம் செய்ய ஏதுவாக மாற்று இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.