கொலை, கொள்ளை, மனித உரிமை மீறல், கொலைவெறி தாக்குதல் என எது நடந்தாலும் கவலைப்படாமல் மாட்டு வண்டிகளை மடக்கி மாமூல் வாங்குவதிலும், கட்டப்பஞ்சாயத்து நடத்தி கையூட்டு பெறுவதிலும் மட்டுமே கவனம் செலுத்துவதாக திருநாவலூர் காவல் நிலைய அதிகாரிகள் மீது குற்றம் சுமத்துகின்றனர் சமூக ஆர்வலர்கள். விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் காவல் நிலைய எல்லையில் ஏராளமான கிராமங்களும், குக்கிராமங்களும் உள்ளன. இதனுடைய எல்லைப் பகுதியிலேயே மணல் எடுக்கக் கூடிய வகையில் கெடிலம் ஆறு செல்கிறது. இந்த காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகளும், அவர்களின் கீழ் நிலையிலுள்ள பலரும் அவர்களின் எல்லைக்குட்பட்ட இடங்களில் கொலை, கொள்ளை எது நடந்தாலும் அதன் மூலம் ஏதேனும் கவனிப்பு கிடைக்குமா என்றும், மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க வைத்து அதில் மாமூல் பெறுவதிலும், பல்வேறு அடிதடி வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்து கையூட்டு பெறுவதிலும் கவனம் செலுத்தி வருவதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர் உதாரணமாக உளுந்தூர்பேட்டை வட்டம் புதுநன்னாரம் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை என்பவரின் மகன் ராஜதுரை என்பவர் கடந்த மே மாதம் 6ஆம் தேதி இருசக்கர வாகனங்களை திருடும் பழக்கம் உள்ள பரமசிவம், விஜயகுமார் என்பவர்களால் தாக்கப்பட்டு மரணமடைந்தாக தெரிகிறது. இதன் மீதான விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் சந்தேக மரணம் என்றும் தற்கொலை மரணம் என்றும் வழக்கை மூடி மறைக்க திருநாவலூர் காவல் நிலைய காவல் துறையினர் முயற்சிக்கின்றனர். அதேபோல் இருந்தை கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரின் மகன்கள் ஜெயராஜ், எட்வர்ட்ராஜா, ஜான் பீட்டர் ஆகியோர் கிராமத்தில் உள்ள பொது குடிநீர் குழாய்களை சேதப்படுத்தியுள்ளனர். இதனை ஏன் என்று தட்டிக் கேட்ட சின்னப்பாவை மின்கம்பத்தில் கட்டிவைத்து மூவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதிலும் குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யவில்லை. அதே கிராமத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சரவணன் தொகுப்பு வீடுகள் பழுது பார்க்க மாயவன் என்பவர் லஞ்சம் தர மறுத்ததால் மாயவனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். வழக்கு பதிவு செய்தும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. ஆரிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி கடுமையான முறையில் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளனர். இதுகுறித்து கோபு, ஆறுமுகம், சரவணன், ஏழுமலை என்ற 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து, நான்கு மாதம் ஆகியும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இப்படி கொலை, கொலை முயற்சி போன்ற புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்காத திருநாவலூர் காவல் நிலைய அதிகாரிகள் இப்பகுதியில் தொகுப்பு வீடு கட்டுவதற்கும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டுவதற்கும் மணல் எடுத்துச் செல்லும் மாட்டு வண்டிகளை மடக்கி மிரட்டி மாமூல் வசூலிப்பதில் ஜரூராக உள்ளனர் என பொதுமக்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநாவலூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.மோகன் கூறியதாவது: சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்து காசு பார்க்கும் திருநாவலூர் காவல் நிலைய அதிகாரிகளை கண்டித்து மேற்படி பல்வேறு புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சில தினங்களுக்கு முன்பு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியும் ஒரு வழக்கில் கூட திருநாவலூர் காவல் நிலைய ஆய்வாளர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே திருநாவலூர் காவல்துறையின் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திங்கட்கிழமை (ஜூன் 17) உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அதன் பிறகும் காவல் துறையினர் மேற்படி சம்பவங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என்றார். வி.சாமிநாதன்.