உளுந்தூர்பேட்டை, நவ. 1- உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் 10 மற்றும் 13ஆவது வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கான சுகாதார வளாகத்தை சீரமைத்து தர வேண்டுமென்று இப்பகுதிகளில் வசிக்கும் பெண்கள், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உளுந்தூர்பேட்டையில் உ.கீரனூர் பகுதியில் இருக்கும் ஆண் மற்றும் பெண்களுக்கான பொது சுகாதார வளாகம் கதவுகள் சேதமடைந்த நிலையில் இருந்து வந்தது. அப்பகுதி மக்கள் இதனை சகித்துக் கொண்டு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 6 தினங்களுக்கு மேல் அங்கிருந்த மின்மோட்டார் பழுதானதால் தண்ணீர் வரவில்லை. கடந்த 27ஆம் தேதி தீபாவளியன்று பேரூராட்சி நிர்வாகத்தினர் மின்மோட்டாரை சரி செய்வதற்காக கழற்றி சென்றுள்ளனர். ஆனால் ஆறு நாட்களுக்கு மேலாகியும் மின்மோட்டார் பொருத்தப்படவில்லை. மேலும் சுகாதார வளாகத்தை பூட்டியும் வைத்துள்ளனர். இந்நிலையில் வேறு வழியில்லாமல் இயற்கை உபாதைகளுக்கு முட்புதர்கள் தேடிச்செல்லும் பெண்களுக்கு சமூக விரோதிகளால் தொல்லைகள் ஏற்பட்டு உள்ளது. எனவே உடனடியாக மோட்டாரை பழுதுபார்த்து தண்ணீர் வசதி ஏற்படுத்திட வேண்டும் எனவும், அனைத்து கழிப்பிட அறைகளுக்கும் கதவுகளை பொறுத்தித் தரவேண்டுமென கோரியும் உ.கீரனூர் பகுதியிலுள்ள அனைத்து தெருக்களிலும் வாய்க்கால் சுத்தப்படுத்தி தரக்கோரியும் அப்பகுதி பெண்கள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவர் ஏ.தேவி, நகர செயலாளர் வீ.சந்திரா ஆகியோர் தலைமையில் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை (நவ.1) காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அங்கிருந்த பேரூராட்சி நிர்வாகத்தினருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை மதியத்திற்குள் மின் மோட்டாரை பொருத்தி தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தருவதாக பேரூராட்சி நிர்வாகத்தினர் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.