மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
சிதம்பரம், ஜூலை 17 - சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாமியார்பேட்டை கடற்கரையில் மீனவர்கள் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாமியார் பேட்டை, புதுப்பேட்டை, சின்னாண்டி குழி, பெரியாண்டிகுழி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட 33 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்களை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 500க்கும் மேற்பட்ட படகுகளில் கருப்புக்கொடி கட்டிக் கொண்டு கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து கிராம மக்கள் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடற்கரையில் கருப்புக் கொடியுடன் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமஹாஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ் ஸ்ரீரீ, மீன்வள உதவி இயக்குனர் ரம்யாலட்சுமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மீனவர்கள் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி நல்ல தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.