tamilnadu

100 நாள் வேலை அனைவருக்கும் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

விருதுநகர், மே.21- விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க தேவையான கருவிகளை வாங்க வேண்டும். அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விருதுநகர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பின்ர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், நகர் செயலாளர் எல்.முருகன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.ஜெயபாரத் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் நாள்தோறும் சுமார் 70 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்ய முடிகிறது. அதிகப்படியாக எடுக்கப்படும் ரத்த மாதிரிகள் தேனி அல்லது மதுரை மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு பரிசோதனை செய்யப்படுகிறது. முடிவுகள் வெளியாக ஒரு வாரம் வரை காலதாமதம் ஏற்படுகிறது. அதுவரை ரத்த மாதிரி எடுக்கப்பட்ட நபர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். எனவே, கூடுதல் திறன் கொண்ட பரிசோதனை கருவிகளை விருதுநகர் அரசுத் தலைமை மருத்துவமனையில் நிறுவ வேண்டும். மேலும், தற்போது வெளி மாநிலத்திலிருந்து ஏராளமான தொழிலாளர்கள் விருதுநகர் மாவட்டத்திற்கு திரும்பி வருகின்றனர்.

அவர்கள், பல கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை பராமரிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருந்த போதும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும், தொண்டர்களையும் பயன்படுத்தி பராமரிப்புப் பணியை பலப்படுத்த வேண்டும். தனிமைப்படுத்தப்படும் காலத்திற்குப்பின் அவர்களுக்கான உணவு, வேலை மற்றும் மறு வாழ்வுக்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளில் விவசாயத் தொழிலாளர்கள், சிறு,குறு விவசாயிகள் என லட்சக் கணக்கானோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பதிவு செய்து வேலை அட்டை வைத்துள்ளனர்.  

கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரு மாதங்களாக வேலையின்றி அவர்கள் அனைவரும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். கடந்த இரு வாரமாக மிகக் குறைந்த அளவு ( 20 பேர் ) தொழிலாளர்களுடன் பல ஊராட்சிகளில் பணிகள் நடைபெற்று வருகிறது.   தமிழக அரசு 100 சதவீதம் தொழிலாளர்களுக்கும் சமூக இடைவெளியுடன் பணிகளை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. எனவே, அதனடிப்படையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பதிவு செய்து அட்டை வைத்துள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். அவர்களுக்கான ஊதியம் நிலுவையின்றி ஒவ்வொரு வாரமும் வழங்கவேண்டும்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் சலுகைகள் அனைத்தும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளது.  கோரிக்கை மனு  திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நூறுநாள் வேலையை 100 சதவீதம் வழங்க வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ஜோதிலட்சுமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சசிகுமார், நகர் செயலாளர் ஜெயக்குமார், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்த குமாரிடம் மனு அளித்தனர்.

இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் தங்கவேல், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் குருசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் ராமர், செட்டியார்பட்டி நகர் செயலாளர் சந்தனகுமார், விவசாயிகள் தொழிலாளர் சங்க ஒன்றியர் பொருளாளர் பவுல்ராஜ் ஆகியோர் மனு அளித்தனர். வத்திராயிருப்பு ஒன்றியத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் துணைத்தலைவர் மணிக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார், வத்திராயிருப்பு நகர் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.