ஒரு நாட்டின் அயல்துறைக் கொள்கை என்பது உள்நாட்டுக் கொள்கையின் நீட்சியே ஆகும். ஒரு நாட்டின் உள்துறைக் கொள்கை பிற்போக்கானதாகவும் அயல்துறைக்கொள்கை முற்போக்கானதாகவும் இருக்க முடியாது. தற்போது மோடி அரசு பின்பற்றி வரும் உள்நாட்டுக் கொள்கையின் நீட்டிப்பாகவே அந்த அரசின் அயல்துறைக் கொள்கையும் அமைந்துள்ளது. அதனால்தான் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டலுக்கு பிரதமர் மோடி உடனடியாக பணிந்து ஹைட்ராக்சில் குளோரோ குயின் மருந்தை உடனடியாக ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொண்டார். இந்தியா காலம் காலமாக பின்பற்றி வந்த அணிசேராக் கொள்கையிலிருந்து விலகி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய கூட்டாளியாக இந்தியா மாற்றப்பட்டதன் விளைவே ஆகும் இது.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் விளைச்சலே நாடு விடுதலை பெற்ற பிறகு உருவான அணிசேரா அயல்துறைக் கொள்கையாகும். நாட்டின் விடுதலைக்காக போராடிய தலைவர்களால் உருவாக்கப்பட்ட கொள்கையாகும் இது.
அணிசேராக் கொள்கையின் அடித்தளம்
இரண்டாம் உலகப்போருக்குப்பிறகு உலக நாடுகள் இரு முகாம்களாக பிரிந்தன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் ஒரு முகாமும், அன்றைய சோவியத்யூனியன் தலைமையில் ஒரு முகாமும் உருவாயின. இந்த இரு முகாம்களும் தங்களது வர்க்க நலன்களின் அடிப்படையிலேயே இயங்கின.
விடுதலைபெற்ற இந்தியா இந்த இரு முகாம்களிலும் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. மாறாக புதிதாக விடுதலை பெற்றிருந்த ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளிடையே ஒற்றுமையை உருவாக்கி அணிசேரா கொள்கை அடிப்படையில் ஒரு முகாம் உருவானது. பல்வேறு நாடுகளில் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராடிய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு இந்தக் கொள்கையை உருவாக்கியதில் முக்கியப்பங்குண்டு. குறிப்பாக சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்த அமைப்பை உருவாக்கியதில் முக்கியப்பங்கு வகித்தார். அன்றைய காலகட்டத்தில் 1946-இல் உருவான மணிலா உடன்பாடு, 1955-இல் உருவான பாக்தாத் உடன்பாடு. அதன்பின் வார்சா உடன்பாடு அடிப்படையில் பல அமைப்புகள் உருவானபோது இந்தியா எதிலும் தம்மை இணைத்துக்கொள்ளவில்லை.
அணிசேராக் கொள்கை உருவானதில் இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் ஒரு பங்குண்டு. விடுதலை பெற்ற நாடு என்ற முறையில் வேறுபட்ட இரு முகாம்களில் ஏதாவது ஒன்றில் சேருவதன் மூலம் மற்றொரு முகாமை பகைத்துக்கொள்ள இந்தியா விரும்பவில்லை.
அமெரிக்காவின் ஆத்திரம்
ஆனால், நேரு அரசாங்கம் பின்பற்றிய இந்தக் கொள்கை அன்றைய அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பிடிக்கவில்லை. நடுநிலை என்ற நேரு அரசின் அறிவிப்பு அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஐசனோவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அவரது அரசின் அயல்துறை செயலாளர் இந்திய அரசின் நடுநிலை என்பது ஒழுக்கக்கேடானது, என்று வெடித்தார். இதற்கு பதிலளித்த அன்றைய பிரதமர் நேரு “அணிசேராக் கொள்கை என்பது ஒவ்வொரு விஷயத்தின் தன்மை அறிந்து அதற்கேற்ப முடிவு செய்வது என்பதாகும். கண்மூடித்தனமாக எந்தவொரு முகாமையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். எங்களது இந்தக் கொள்கையை ஏளனம் செய்பவர்களை நாங்கள் ஏளனம் செய்கிறோம் என்றது”
பிரதமர் நேரு மேலும் கூறுகையில், பாசிசம், காலனியாதிக்கம், நிறவெறி ஆதிக்கம் போன்ற பல தீய சக்திகளை நாங்கள் பார்த்துள்ளோம். அணுகுண்டையும், ஆக்கிரமிப்பையும் பார்த்துள்ளோம். இந்த அனுபவங்களிலிருந்து உருவானதுதான் எங்களது அணிசேராக் கொள்கை என்று பதிலடி கொடுத்தார்.
நேரு-காஸ்ட்ரோ சந்திப்பு
1960-இல் ஐ.நா.சபை கூட்டத்தில் பங்கேற்க உலகத் தலைவர்கள் நியூயார்க்கில் குவிந்தனர். உலகத் தலைவர்கள் நட்சத்திர ஹோட்டல்களில் தங்க ஐ.நா. சபை ஏற்பாடு செய்திருந்தது. கியூபாவில் புரட்சி நடத்தி புதிய சோசலிச அரசை ஏற்‘படுத்திய 34 வயதேயான பிடல் காஸ்ட்ரோவும் நியூயார்க் வந்தார். அமெரிக்க அரசின் மிரட்டலால் காஸ்ட்ரோ தங்குவதற்கு எந்த நட்சத்திர ஹோட்டலும் இடம் தரவில்லை. காஸ்ட்ரோ ஐ.நா. வளாகத்திற்குள் டெண்ட் அடித்து தங்கப்போகிறேன் என அதிரடியாக அறிவித்தார். ஐ.நா.நிர்வாகம் கையைப் பிசைந்தது. இந்த நிலையில் தெரேசா என்ற சாதாரண ஒரு விடுதியின் முதலாளி காஸ்ட்ரோவுக்கு இடமளிக்க முன்வந்தார். அவரின் அன்புக்காக அங்கேயே தங்க சம்மதித்தார் காஸ்ட்ரோ.
உலகத் தலைவர்களின் சந்திப்பு தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருந்த நிலையில் தெரேசா விடுதி மட்டும் வெறிச்சோடிக் கிடந்தது. காஸ்ட்ரோவை சந்தித்தால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பதால் பலரும் வரவில்லை.
இந்த நிலையில் இந்தியப் பிரதமர் நேரு, காஸ்ட்ரோவின் அறைக்குள் நுழைந்தார். இந்த நிகழ்வு குறித்து காஸ்ட்ரோ கூறுகையில், “எனக்கு அப்போது வயது 34 மட்டுமே. ஒரு வெளிநாட்டுத் தலைவரை சந்திப்பதற்கான சம்பிரதாயங்கள் என்ன என்பதுகூட எனக்குத் தெரியாது. நேரு என்ற மாபெரும் தலைவர் என் அறைக்கு வந்தது எனக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. அவர் என்னை உற்சாகப்படுத்தி பெருமிதத்தில் ஆழ்த்தினார். சர்வதேச அளவில் என்னை கௌரவப்படுத்தினார்.” என்று கூறியுள்ளார்.
இதன் பின்பு காஸ்ட்ரோவை பல்வேறு தலைவர்கள் சந்தித்தனர். இதுகுறித்து நேருவிடம் கேட்டபோது, நாங்கள் எந்த முகாமிலும் இல்லை. காஸ்ட்ரோவை சந்திப்பதால் அப்படி என்ன நிகழ்ந்துவிடும். அதையும் பார்க்கலாம் என்று இயல்பாக பதிலளித்தார்.
வங்கதேசம் உருவான கதை
1970-ஆம் ஆண்டு தேர்தலில் கிழக்கு பாகிஸ்தானில் சுதந்திரமாக நடந்த தேர்தலில் முஜிபுர்ரஹ்மானின் அவாமி லீக் கட்சி 99 சதவீத இடங்களைப் பிடித்தது. ஆனால், பாகிஸ்தானின் ராணுவ சர்வாதிகாரி யாஹாகான் இதை ஏற்கவில்லை. பெரும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. 30 லட்சம் வங்காளிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து மேற்குவங்கம், அசாம், திரிபுரா மாநிலங்களுக்கு லட்சக்கணக்கானோர் அகதிகளாக வந்தனர். இந்த நிலையில் இந்தப் பிரச்சனையில் இந்தியா தலையிடவேண்டிய நிர்ப்பந்தம் வந்தது.
1971-இல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நடைபெற்றது. அப்போது, அமெரிக்கா பாகிஸ்தானுக்கு முழு ஆதரவு வழங்கியது. அமெரிக்கா அணுசக்தி ஆயுதம் தாங்கிய யுஎஸ்எஸ் என்டர்பிரைஸ் என்ற கப்பலை இந்தியாவை தாக்குவதற்காக வங்காளவிரிகுடாவிற்கு அனுப்பியது. இதைத் தொடர்ந்து சோவியத்யூனியனுக்கும் இந்தியாவிற்கும் ஏற்பட்டிருந்த அமைதிக்கான நட்பு மற்றும் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில் சோவியத்யூனியன் தன்னுடைய நீர்மூழ்கிக் கப்பலை அனுப்பியது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஏழாவது கப்பற்படை அணி பின்வாங்கி ஓடியது. இந்தியாவின் ஒத்துழைப்புடன் வங்கதேசம் என்ற புதிய நாடும் உருவானது.
இது மட்டுமல்ல இந்தியா பொருளாதார சுயசார்பு அடைந்துவிடக்கூடாது என்பதற்காகவும் தொழிலில் வளர்ச்சியடையக் கூடாது என்பதற்காகவும் வரலாற்றின் வழிநெடுகிலும் அமெரிக்கா முட்டுக்கட்டைகளையே போட்டுவந்துள்ளது. இந்தியாவுக்கு உற்ற நண்பனாக அமெரிக்கா ஒருபோதும் இருந்ததில்லை. இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு சோவியத் யூனியனே உற்ற நண்பனாக விளங்கியது. நெய்வேலி உட்பட பல்வேறு உதாரணங்களைக் கூறமுடியும். ஜனதா ஆட்சிக்காலத்தில் வாஜ்பாய் அயல்துறை அமைச்சராக இருந்தபோது புதுதில்லியில் அணிசேரா நாடுகளின் மாநாடு நடைபெற்றது. இந்தியா பின்பற்றி வந்த அணிசேரா அயல்துறைக் கொள்கை கொஞ்சம் கொஞ்சமாக கைவிடப்பட்டு அமெரிக்கா சார்பு கொள்கை பின்பற்றப்பட்டது. இதற்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியிலேயே இது தொடங்கிவிட்டது. அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணியும் போக்கு உருவானது..
தலைகீழ் மாற்றம்
ஆனால், மோடி தலைமையில் 2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சி உருவான நிலையில் இந்தியாவின் அயல்துறைக் கொள்கை தலைகீழாக மாற்றப்பட்டு முழுக்க முழுக்க நம்முடைய இந்தியத்திருநாடு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய கூட்டாளியாக மாற்றப்பட்டது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐப்பான் ஆகிய நாடுகளோடு இணைந்து இந்தியா கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டது. உலக அரங்கில் சீனாவை தணிமைப்படுத்த இந்தியாவை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது.
பாதுகாப்புத்துறையில் மட்டுமின்றி உற்பத்தித்துறையிலும் அமெரிக்காவின் மிரட்டல் மற்றும் கெடுபிடியால் இந்தியாவின் நலன் காவு கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் சமீபத்திய இந்திய வருகையின்போது அமெரிக்காவிடமிருந்து ஆயுதம் மற்றும் தளவாடங்கள் ரூ.21 ஆயிரம் கோடி அளவிற்கு வாங்குவதற்கு உடன்பாடு ஏற்பட்டது.
அயல்துறைக்கொள்கையில் ஏற்பட்டுவரும் இந்த மாற்றங்கள் நம்நாட்டின் சுயாதிபத்தியத்தை காவு கொடுப்பதில் போய்முடியும். சுயேட்சையான அயல்துறைக் கொள்கையை பின்பற்ற வேண்டும். அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணவேண்டும். அனைத்திற்கும் அமெரிக்காவை சார்ந்திருக்கும் நிலைபாட்டை கைவிட்டு ரஷ்யா, சீனா உட்பட பல்வேறு நாடுகளுடனான நட்புறவை வளர்க்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் மோடி அரசு இதை காதில் போட்டுக்கொள்ளாமல் அமெரிக்காவிடம் சரணாகதி அடைந்ததன் விளைவையே இன்று பார்க்கிறோம்.
கொரோனாவின் பிடியில் உலகமே சிக்கி தவிக்கிறது. மக்கள் நலத் திட்டங்களை கைவிட்டு ஆயுத வியாபாரத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அமெரிக்கா பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. தனியார்மயத்தின் கோரவிளைவுகளை அந்நாட்டு மக்கள் சந்திக்கிறார்கள். மலேரியாவிற்கு மருந்தாக கொடுக்கப்படும் ஹைட்ரோக்சி குளோரோகுயின் மருந்து கொரோனோ சிகிச்சைக்கு பயன்படக்கூடும் என யூகிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்த மருந்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா இந்த மருந்தை ஏற்றுமதிசெய்ய வேண்டுமென டெனால்டு டிரம்ப் மோடியை மிரட்டுகிறார். எந்த ஆட்சேபணையும் இன்றி மோடி அரசு முக்கிய மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த மருந்தை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய அமெரிக்கா கடந்த மூன்றாண்டுகளாக தடைவிதித்திருந்தது. மும்பையைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்து அனுப்பிய இந்த மருந்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என்றுகூறி தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை இப்போதுதான் நீக்கியது அமெரிக்கா. ஹைட்ரோக்சி குளோரோகுயின் உள்ளிட்ட மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்தியஅரசு விதித்திருந்த தடையை ஒரே ஒரு அதட்டலால் மிரட்டலால் விலக்கிக்கொண்டது. இது 130 கோடி இந்திய மக்களையும் நாட்டின் இறையாண்மையையும் அவமதிக்கும் செயலாகும்.
அமெரிக்க மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யவேண்டுமென்பதிலோ, அமெரிக்கா உட்பட அனைத்து உலக நாடுகளுடனும் நல்லுறவுடன் இருக்கவேண்டுமென்பதிலோ இந்திய மக்களுக்குக மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நட்புறவு என்பது சமமான கூட்டாளிகள் என்ற அடிப்படையில் இருக்கவேண்டும். ஆண்டான், அடிமை என்ற முறையில் இருக்கக்கூடாது. டிரம்ப் கை நீட்டி உத்தரவிடுவதும் மோடி கைகட்டி நிறைவேற்றுவதும் வெட்கக்கேடானது.
கூட்டுக் களவாணி முதலாளித்துவம்
வெள்ளை மாளிகையின் வேலைக்காரன் அல்ல இந்தியா. இந்த ஏற்றுமதியிலும் கூட மோடி அரசின் சதிச்செயல்கள் அம்பலமாகியுள்ளன. பொதுத்துறை நிறுவனத்திடமிருந்து ஏற்றுமதி செய்யாமல் குஜராத்தை சேர்ந்த இரு நிறுவனங்களின் உற்பத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதை இறக்குமதி செய்யும் கம்பெனியில் டிரம்ப்பும் ஒரு பங்குதாரர்.
உலகமே இன்றைக்கு இருள்சூழ்ந்து நிற்கும் வேளையிலும் கூட கார்ப்பரேட் முதலாளிகளின் கூட்டுக் களவாணித்தனம் நடந்துகொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் பாணியில் சீனாவுக்கு எதிராக இங்கேயும் சிலர் விஷமப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் நிலையில் முகக்கவசங்களை தேவையான அளவு இலவசமாகவே நம்நாட்டிற்கு சீனா தருகிறது. தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் சீனாவிடமிருந்து துரித சோதனைக் கருவிகளை இறக்குமதி செய்கின்றன. இங்குள்ள பாஜக-வினரும் அவரது ஊதுகுழல்களும் சீனாவுக்கு எதிராக விஷம் கக்குகின்றன.
ஆபத்துக்காலத்தில் உதவி செய்பவர்கள் தான் உண்மையான நண்பர்கள். அப்போதும் அடித்துப் பிடுங்குபவர்கள் நண்பர்களாக இருக்கமுடியாது. இந்த உண்மை இந்திய மக்களுக்கு தற்போது மிகத் தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கிறது.