tamilnadu

img

பல்கலை- கல்லூரி தேர்வுக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்

மாணவர் சங்கம் கோரிக்கை

சென்னை,ஏப்.26- பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை  அரசே ஏற்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

`உலகம் முழுவதும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல கோடி மக்கள் வேலையிழந்து, வருமானமின்றி அல்லல்பட்டு வருகின்றனர். கிராமப்புற மற்றும் நகர்ப்புறத் தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் பல்கலைக்கழகங்கள் மூலமாக கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி, யுஜிசி அனுமதி பெற்று இயங்கி வரும் பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் பட்டய மற்றும் பட்டப் படிப்பு  பயிலும்  மாணவர்கள் தேர்வுக் கட்டணத்தை ஏப்ரல் 27 முதல் மே 10 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக செலுத்த உத்தரவிட்டிருப்பது மாணவர் விரோதச்  செயலாகும்.  தனியார் கல்வி நிலையங்கள் கட்டணம் செலுத்தக் கட்டாயப்படுத்தக்  கூடாதென தமிழக அரசு அறிவித்து விட்டு அரசே பல்கலைக்கழகங்கள் மூலம் கட்டணம் செலுத்தக் கோரி சுற்றறிக்கை அனுப்புவது மக்களை ஏமாற்றும் வேலை.

மேலும் கிராமப்புறங்களில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இணைய வசதியின்றியும்  சாதாரண வகை செல்போன்களைப் பயன்படுத்தியும்  வரும் சூழலில் ஆன்லைனில் தேர்வுக் கட்டணம் செலுத்தச் சொல்வதும் வகுப்பெடுப்பதும் அவர்களின் வாய்ப்பைப் பறிக்கிற வஞ்சமே ஆகும். கொரோனா பேரிடர் காலத்தில் அன்றாட அடிப்படைத் தேவைகளுக்கே மக்கள் திண்டாடி வரும் சூழலில்   பல்கலைக்கழகங்கள் வாயிலாக கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையினை இரத்து செய்வதோடு  தேர்வுக் கட்டணத்தை தமிழக அரசே ஏற்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.