tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு கோவையில் மாணவர்கள் கொதிப்பு

கோவை, டிச. 19 –  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட் டம் தீவிரமடைந்து வரும் நிலையில், கோவையில் வியாழனன்று சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவ தும் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி சர்வாதிகாரத்தனமாக மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள இச்சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து,  அரசு கலைக்கல்லூரி, பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர்கள் என அடுத்தடுத்து தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். 

இதன் தொடர்ச்சியாக வியாழனன்று சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை  புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரையில் எங்களது போராட்டம் தொடரும், தீவிரப்படுத்துவோம் என்றனர்.  இதேபோல் கோவை அவினாசி சாலையில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவிகள்  “யாதும் ஊரே யாவரும் கேளிர்”, “இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டை உடைக்காதே”, “மதச்சார்பின்மையை உடைக்காதே” என பதாகைகளை ஏந்தி, முழக்கங்களையும் எழுப்பினர். அகதிகளாக வருபவர்களைப் புறக்கணிப்பதை ஏற்றுக் கொள்ள முடி யாது எனவும் மதத்தின் அடிப்படையில் வரும் பிரிவினையை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் தெரிவித்தனர்.