சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு, வரும் 19ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பயணிகள் ரயில் சேவை கடந்த மாா்ச் 24ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. இதன்பிறகு, பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், வரும் 19ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து, தினமும் காலை 6.25மணிக்கு புறப்படும் ரயில்(06057) காலை 9.40 மணிக்கு திருப்பதிக்கு செல்லும். இதேபோல், திருப்பதியில் இருந்து தினமும் காலை 10.15 மணிக்கு புறப்படும் ரயில் (06008) மதியம் 1.40 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வரும்.
இந்த ரயிலின் டிக்கெட் முன்பதிவு செவ்வாய்க்கிழமை(நவ.17) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.