tamilnadu

img

வெற்றியை தடுக்க ஆட்சியாளர்கள் சதி: மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை,ஜன.2- உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிடாமல் தாமதப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையரை சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்  கூறியதாவது:- உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நோக்கி திமுக கூட்டணி முந்திக்கொண்டிருக்கிறது. ஆனால், திமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்துவதற்காக அதிமுக, காவல் மற்றும் அதிகாரிகள் சதி செய்கிறார்கள். வாக்கு எண்ணிக்கை முடிவுகளை தாமதமாக அறிவிக்கிறார்கள்.  

எடப்பாடியில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், அறிவிக்கப்பட வேண்டிய முடிவுகளை அறிவிக்காமல் உள்ளனர். சேலம் கொளத்தூரில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றும் அதனை அறிவிக்கவில்லை. வாக்கு எண்ணும் மையத்தில் இருந்தபடி அதிகாரிகளுக்கு, முதல்வரின் மைத்துனர் உத்தரவிடுகிறார். துணை முதல்வரின் போடி பகுதியில் வெற்றி நிலவரத்தை அறிவிக்கவில்லை. விளாத்திகுளத்தில் 3 வாக்குப்பெட்டியைக் காணவில்லை என புகார் வருகிறது. அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தேர்தல் ஆணையத்தில் வந்து புகார் அளித்துள்ளேன். தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை  நாட உள்ளோம். தேர்தல் ஆணையத்தில் உண்ணாவிரதம் இருப்பதா அல்லது மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவதா என்பதை பின்னர் அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார். 

;