tamilnadu

img

நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்... வானிலை மையம் எச்சரிக்கை

 நீலகிரி மற்றும் கோயம்புத்தூரில் இன்று கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் கன மழையால் இந்த இரண்டு மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பல ஏக்கர் விவசாய நிலங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

 அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி, கோவையில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் தெரிவித்தார். அவர் கூறுகையில், ''கேரளா, வால்பாறை, ஆனைமலை ஆகியப்பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கன மழை பெய்யும். பலத்த மழையுடன், காற்றும் இருக்கும்'' என்று அறிவித்துள்ளார். நீலகிரியின் பல இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று பெய்த மழையினால் நீலகிரியின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன.  

கடந்தாண்டும் இதே நாளில் நீலகிரியில் அதீத மழை பெய்தது. கடந்தாண்டு அவலாஞ்சியில் 820 எம்எம் மழை ஆகஸ்ட் 8ஆம் தேதியும், ஆகஸ்ட் 9ஆம் தேதி 911 எம்எம் மழையும் பெய்து இருந்தது. அதேபோல் இன்றும் கன மழை பெய்யும் என்று அறிவித்து இருப்பது நீலகிரி மக்களை கவலை அடையச் செய்துள்ளது.