சென்னை, ஆக. 31- தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலையோ அல்லது இரவிலோ நகரின் ஒரு சில பகுதிகளில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக பூந்தமல்லி, அண்ணா பல்கலைக்கழகத்தில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கம், சோழவரம், தாமரைபாக்கம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மீனவர்கள் தமிழக கடற்கரை பகுதிக்கு 400 கிலோ மீட்டர் தூரத்துக்கு மீன் பிடிக்கச் செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.