1990களுக்கு பின்பு இந்திய பொருளதாரத்தின் நான்காம் கட்டமான தீவிரமான தாரளமய, தனியார்மய கொள்கைகள் அமலான காலமாக உள்ளது. சுதந்திரமான போட்டி என்ற நிலைமை மாறி உற்பத்தியும், மூலதனமும் சிலர் கையில் குவிந்து ஏகபோக முதலாளிகளின் வளர்ச்சிக்கானதாக மாறியுள்ளது. தொழில் மூலதனமும், நிதி மூலதனமும் ஒன்றாக இணைவதும், சந்தைகளை ஏகபோக முதலாளிகள் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்வதும் என்ற நிலையில் தங்குதடையற்று செல்வதற்கு அனைத்து சட்டங்களையும் காலில் போட்டு மிதிப்பது, அல்லது ஆளும் அரசுகள் மூலம் மாற்றுவது என்ற தீவிரத் தன்மையை நோக்கி செல்வதற்கு முயற்சி செய்கிறது. பல நாடுகளின் அரசுகள் இதற்கு வளைந்து கொடுத்து வருவதை காண்கிறோம்.
இதன்தொடர்ச்சிதான் ஒற்றுமையாக உள்ள தொழிலாளி வர்க்கத்தின் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற பண்பாட்டை சீர்குலைப்பது. அதன் அடிப்படை வேர்களை சிறிது சிறிதாக அழிப்பது. அடையாளங்களுக்குள் கொண்டு போய் நிறுத்த முயற்சி செய்யும் சதியும், சூழ்ச்சியும் உள்ளடக்கியது. அடிப்படை வாழ்வியல் தேவைகளில் இருந்தே மொழி, பண்பாடு, நாகரிகங்கள் உருவாகின. பல்வேறு காலகட்டங்களில் அது ஆளும் வர்க்கத்தின் செயல்பாட்டிற்கேற்றவாறு கட்டமைக்கப்பட்டது. தற்போதும் அப்படியே கட்டமைக்க முயற்சி செய்யப்படுகிறது.
ஆம், தொழிலாளர்களின் உழைப்பாலும், தியாகத்தாலும் பெறப்பட்ட உரிமைகளான, சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ( இபிஎப்), தொழிலாளர் அரசு ஈட்டுறுதி காப்பீட்டு நிறுவனம்(இஎஸ்ஐ) ஆகியவற்றில் கை வைக்கும் வேலையை மத்திய அரசு துவங்கியுள்ளது. நாடாளுமன்ற விதிகளின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த இரண்டு துறைகளையும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் நிர்வாகித்து வருகிறது. தற்போது கார்ப்ரேட்டுகளுக்கு ஆதரவாக மாற்றி அமைக்க விதிமுறைகளை திருத்த முயற்சி செய்கிறது. கோவிட் 19 கால கட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் அமெரிக்காவும், இந்தியாவும் தான். இரண்டு நாடுகளிலும் பொது சுகாதார கட்டமைப்பு பலவீனப்படுத்தப்பட்டு தனியார் மருத்துவம் வளர்வதற்கே ஆட்சியாளர்கள் தொடர்ந்து முயற்சி வருகிறார்கள்.
மொழி, கல்வி உரிமை பறிப்பு
இதன் ஒரு பகுதியாக தற்போது, இஎஸ்ஐ கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தொழிலாளர்கள் வீட்டுப் பிள்ளைகள் மருத்துவம் படிக்க 20 சதவீத இடஒதுக்கீடு அமலில் இருந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பு காரணமாக 383 மருத்துவ படிப்பு சேர்க்கை இடங்கள் கேள்விக்குள்ளக்கப்பட்டுள்ளன. இதனால் கல்வி மற்றும் சேவை இரண்டும் மறுக்கப்படுகிறது.ஏற்கனவே மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பாஜக அரசு, மாநில தொழிலாளர் காப்பீட்டு கழகத்தின் நிதி ரூ.60000 கோடியை ரிலையன்ஸ் வசம் ஒப்படைத்தது. இதை ரிலையன்ஸ் நிப்பான் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் தான் மேலாண்மை செய்யும்; இதனை நாங்கள் பெருமையாக கருதுகிறோம் என அந்நிறுவன அதிகாரி ‘மகிழ்ச்சி’ பொங்க கூறியுள்ளார். இது மட்டுமல்ல, வேறு பல மாநிலங்களின் இஎஸ்ஐ நிதியும், பல பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர் காப்பீட்டு கழக நிதியும் ஏறத்தாழ ரூ.4.10 லட்சம் கோடி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்தியாவின் சுகாதாரத்துறையில் ஏறத்தாழ 15 முதல் 18 சதவீதம் அளவிற்கு வளர்ச்சிப் பெறும் என கார்ப்பரேட்கள் மதிப்பிட்டு வருகிறார்கள். பிரதமர் மோடியும் இந்தியா ஒரு மிகப்பெரிய மருத்துவ சுற்றுலா தளமாக அமையும் எனக் கூறுகிறார். இதன் பின்னணி யாருக்கானது என புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
இத்தகைய கார்ப்பரேட்மயமாக்கல் அரசு நிர்வாகிக்கும் துறையையும் விட்டுவைக்காமல் தனது வர்க்க நலனை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் அனைத்து துறைகளையும் சூறையாடத் துவங்கியுள்ளது. சமீபத்தில் ரயில்வே, தபால், தொல்லியல் துறை தேர்வுகளுக்கான வினா விடையாக இருக்கலாம், நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளாக இருக்கலாம் அனைத்திலும் இரு மொழிகளாக ஆங்கிலம், இந்தி மட்டுமே இடம் பெறுவதையும் கடும் எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின் இதர மொழிகளிலும் தேர்வு நடத்த திட்டமிடுவதையும் பார்த்து வருகிறோம்.இந்த சூழலில் இருந்தே தற்போதைய இஎஸ்ஐ நிறுவனத்தில் மொழித் திணிப்பை பார்க்க வேண்டியுள்ளது. ஒரு நாடு, ஒரு வரி, ஒரு சந்தை, ஒரு கார்டு, ஒரு மொழி, ஒரு கலாச்சாரம் என்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலின் நகர்வே இந்த முயற்சியாகும்.
தொழிலாளர் நலன் பறிப்பு
இஎஸ்ஐ நிறுவனத்தில் திருப்பூர் மாவட்டத்தில் 4 லட்சம் தொழிலாளர்கள் சந்தாதாரர்களாக உள்ளனர். தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் உள்ளனர். இஎஸ்ஐ தொடர்பான தேவைகளுக்கான தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி (TOLL FREE) எண் மற்றும் சரக அலுவலக இணைய தளத்திலும் ஆங்கிலம் இந்தி மட்டுமே உள்ளது. தமிழ் மொழியை இணைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து இஎஸ்ஐ அலுவலகங்களிலும் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அதிகாரிகள் பொறுப்பில் தமிழ் மொழி தெரியாதவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள், சந்தாதாரர்கள், பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை தாய்மொழியில் தெரிவிக்க முடியவில்லை. எனவே தமிழகத்தில் தமிழ் மொழியை தெரிந்தவர்களை நியமிக்க வேண்டும்.ஆட்சிப்பணி பயிற்சியில் கூட அந்தந்த மாநிலங்களின் மொழியை கட்டாயம் கற்றுக் கொடுத்து அனுப்பும் நிலையில் வெறும் இந்தியை மட்டும் பேசும் அதிகாரிகளை நியமிப்பது பெரும் நெருக்கடிகளையே உருவாக்கும். சமீபத்தில் உயர்நீதிமன்றம் சொந்த தாய் மொழியான இந்தியில் தேர்வு பெற முடியாதவர்கள் தமிழில் மட்டும் தேர்வு பெற்று வேலையில் சேரந்தது எப்படி என்பதற்கு பதிலளிக்க வேண்டும் என அரசுகளை கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இஎஸ்ஐ சந்தாதாரர்களான ஓய்வு பெற்றத் தொழிலாளர்கள் “லைப் சர்டிபிகேட்” எனப்படும் அவர்களின் ஆயுள் சான்றிதழை ஆண்டுதோறும் இஎஸ்ஐ-யில் சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை அரசிதழ் சான்று பெற்ற அலுவலர்கள், எம்.பி.,எம்.எல்.ஏ., ஆகிய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கங்களிடம் ஆயுள் சான்றிதழ் பெற்று இஎஸ்ஐ அலுவலகத்தில் ஒப்படைப்பது நடைமுறையாக உள்ளது. தற்போது தொழிற்சங்கம் ஆயுள் சான்றிதழ் கையெழுத்திட்டுக் கொடுத்தால் அதை இஎஸ்ஐ அலுவலகத்தில் வாங்கிக் கொள்ள மறுக்கின்றனர். இது தொழிற்சங்க உரிமை பறிப்பு மட்டுமின்றி, தொழிலாளர்களையும் அலைக்கழிக்கும் மோசமான செயலாகும். தொழிற்சங்கம் கையொப்பமிட்டு சான்றளிக்கும் பழைய நடைமுறை தொடர வேண்டும்.
இஎஸ்ஐ சந்தாதாரர்களான தொழிலாளர் மற்றும் அவர்களது குடும்பத்தார், எந்த தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டு, அதற்குரிய மருத்துவச் செலவை இஎஸ்ஐ நிறுவனத்தில் கோரிப் பெறுவதற்கான கால அவகாசத்தை ஓராண்டில் இருந்து மூன்று மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என இஎஸ்ஐ நிறுவனம் வெட்டிச் சுருக்கியுள்ளது. 20க்கும் மேற்பட்ட ஆவணங்களை சேகரித்து ஒரு தொழிலாளி விண்ணப்பிக்க முறையான விபரங்கள், ரசீதுகள் இல்லாமல், மருத்துவ செலவினங்கள் உள்ளிட்டவற்றை உரிய கால அவகாசத்துக்குள் விண்ணப்பிக்க முடியாமலும் பாதிக்கப்படுவார்கள். எனவே, ஓராண்டுக்குள் விண்ணப்பிக்கலாம் என்ற நடைமுறை தொடர வேண்டும்.
மேற்கண்ட இந்த நடைமுறையும் கூட இஎஸ்ஐ யின் நிதி பெரும்பகுதியை தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்ட பின்னணியில் நிதி நெருக்கடியில் இஎஸ்ஐ உள்ளாதா என்ற கேள்வியை எழுப்பச் செய்கிறது. தொழிலாளர்களின் உழைப்பில் உருவான இஎஸ்ஐ நிதியை சீர்குலைக்காமல் தொழிலாளர்களின் வாழ்வதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டுரையாளர் : மாவட்டச் செயலாளர்,
....செ.முத்துக்கண்ணன்... சிபிஐ(எம்) திருப்பூர் மாவட்டக்குழு