மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
திருநெல்வேலி, மே 2 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய - மாநில அரசுகள் அறிவித்த முடக்கம் நாற்பது நாட்களை எட்டி விட்டது. தொழில் மற்றும் வேலை முடக்க த்தின் காரணமாக ஏழை, எளிய மக்கள் வருமானமின்றி உணவுக்கும் இதர அத்தியா வசிய தேவைகளுக்கும் வழியற்று பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அரசு அறிவித்த நிவாரணம் யானைப் பசிக்கு சோளப்பொரியாக, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையில் உள்ளது. இதுவும் அனைத்து பகுதியினருக்கும் போய்ச் சேரவில்லை. ரேசன் கார்டு இல்லாதவர்கள், வாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்கள் என அரசு அறிவிப்பின் பயன்களைப் பெறாத மக்கள் ஏராளமாக உள்ளனர்.
இந்நிலையில் நெல்லை பழைய பேட்டையில் உள்ள தொழிலாளர்கள், அரசு நிவாரண உதவிகள் கேட்டு தனி மனித இடைவெளியோடு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இது குறித்த செய்திகளும் பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது. இச்செய்தி அறிந்து அப்பகுதி மக்களுக்கு நிவாரணம் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல், ஒன்றாய் சேர்ந்து பட்டினி கிடக்கிறோம், உதவுங்கள் என கோரிக்கை வைத்தவர்களில் இருபது பேர் மீது 188, 269 ஆகிய இரு பிரிவுகளில் நெல்லை மாவட்ட காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது. வழக்கை வாபஸ் பெற நடவடிக்கை எடுப்பதோடு, அப்பகுதி மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு, மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துகிறது.