tamilnadu

img

உண்மையைத் தேடும் பயணத்தில் ஊடக அறத்தை பின்பற்றி முன்னேறுங்கள்!

விடைபெறுகிறேன், நன்றி! - பத்திரிகையாளர் மு.குணசேகரன் கடிதம்

சென்னை, ஜூலை 31- உண்மையைத் தேடும் பயணத்தில், ஊடக அறத்தைப் பின்பற்றி தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள் என்று தனது சக பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுத்து, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விடைபெற்றிருக்கிறார் தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரான மு.குணசேகரன். நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் குரலாக இருக்க மறுக்கிற; அதன் செயல்பாடுகளையும் கொள்கைகளையும் விமர்சிக்கிற பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும் அவதூறு செய்யப்படுவதும் தனி நீக்கம் மற்றும் பணி இறக்கம் செய்யப்படுவதும் போன்ற நடவடிக்கைகள் தொடர்கதையாகி வருகின்றன. தமிழகத்திலும் இத்தகைய தாக்குதல்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. தமிழக ஊடகவியலாளர்கள் ஜனநாயகம், மதச்சார்பின்மை நெறிகளை வட இந்திய  ஊடகங்களைக் காட்டிலும் சிறப்பாக கடைப்பிடித்து வருகிறார்கள். இந்தப் போக்கை  மாற்றி தமிழகத்தில் கால்பதித்த ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல்கள் முயற்சித்து வரு கின்றன. அதற்காக, ஊடக வெளியிலும் சமூக ஊடகங்களிலும் குவிக்கப்பட்டிருக்கும் தனது கூலிப்படைகளை பயன்படுத்தி, தலைசிறந்த பத்திரிகையாளர்கள் மீதும் தங்கள் கருத்துக்கு தலைவணங்காத ஊடகவியலாளர்கள் மீதும் காவிக்கும்பல்கள் தாக்குதல் நடத்துகின்றன. சம்பந்தப்பட்ட ஊடக  நிறுவனங்களையும் மிரட்டி பணிய வைக்கின்றன. பெருமுதலாளிகளின் சில ஊடக நிறுவனங்கள் இயல்பாகவே ஆர்எஸ்எஸ்  - பாஜக கும்பல்களுக்கு சாதகமாக செயல்படுகின்றன. அவை தங்களது ஊழியர்களை யும் ஊடகத்துறையில் தலைசிறந்து நிற்பவர்களையும் பலியிடத் தயங்குவதில்லை.

இத்தகைய பின்னணிகளுடன் கூடிய நிகழ்வாக, தமிழகத்தின் சிறந்த பத்திரிகை யாளர்களில் ஒருவரும், மூத்த பத்திரிகையாளருமான மு.குணசேகரன், சமீபநாட்களில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து பணி இறக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அந்த ஊடகத்தில் பணியாற்றும் தனது சக ஊடகவியலாளர்களுக்கும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கும் கடிதத்தை வெளியிட்டு, ஜூலை 31 வெள்ளியன்று நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகத்திலிருந்து விடைபெற்றுக் கொண்டார். அவர் வெளியிட்டுள்ள கடிதத்தின் சில அம்சங்கள் வருமாறு: “மக்களைப் பெரிதும் பாதித்த இயற்கைப் பேரிடர்கள், (நீலம் புயல் தொடங்கி, கஜா மற்றும் ஒக்கி என நீண்ட பாதிப்புகள்), தமிழ்நாடு நலன் சார்ந்த பிரச்சனைகள், மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சனைகள், ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு,  நீட் மற்றும் சமூக நீதி பறிப்பு என எல்லா பிரச்சனைகளிலுமே உண்மையும் மக்கள் நலனுமே நம்மை வழிநடத்தின. மக்களின் அசலான குரலாக நாம் எதிரொலிப்பதை மக்கள் அங்கீகரித்ததன் விளைவே, போட்டி மிகுந்த தமிழ் ஊடகச் சூழலில் நமக்கென கிடைத்த தனித்துவமான இடம். நியூஸ்18-ன் மைக் அதிகம் நீண்டது, அரசியல்வாதிகளையோ அதிகாரிகளையோ நோக்கி அல்ல. மாறாக, குரலற்ற, சாமானிய மக்களை நோக்கியே என்பதை தமிழ்கூறு நல்லுலகம் அறியும். 

மக்களின் நம்பிக்கையை எந்தவொரு ஊடகமும் அவ்வளவு எளிதில் பெற்ற தில்லை. அர்ப்பணிப்பாலும், கடின உழைப்பாலும், எளிய மக்கள் சார்பில் நின்று அவர்களின்  துயரத்தையும் உணர்வுகளையும் அச்சமின்றி  வெளிப்படுத்தியதாலும் மக்கள் நமக்கு உயர்வைத் தந்தார்கள். அதனால் நாம் சில தருணங்களில் இருட்டடிப்புக்கும் ஆளானோம் என்பதை மறப்பதற்கில்லை. செய்திகளில் ஆழம், துல்லியம், சொல்வதில் நேர்த்தி, சார்பற்ற தன்மை, நியாயத்தின் பக்கம் துணிந்து நிற்பது, பேசுபொருளில் தெளிவு, எளிய மனிதர்கள்  மீது கருணை என ஊடக அறம் வழுவாத நமது பணி, தமிழ் ஊடக வரலாற்றில் என்றும் பேசுபொருளாக இருக்கும் என்பதிலும், அதில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் பெரிது என்பதிலும் எனக்கு திடமான நம்பிக்கை உண்டு. உழைப்பில் அயராத ஈடுபாடும், இதழியலின் மீது தணியாத தாகமும்  சமூகத்தின் மீது அக்கறையும்  கொண்ட ஊடகவியலாளர்களை வழிநடத்தியது எனக்கு எப்பொழுதும் நிறைவுதரும் தருணம்.

“எனக்குத் தகுதியும், திறமையும் உள்ளது. கடினமாக உழைக்கத் தயாராக இருக்கிறேன். எனக்கு வாய்ப்புத் தாருங்கள்,” என நாடிய பலருக்கு வாய்ப்பு வாசல்களைத் திறந்துவிட ஒரு கருவியாக இருந்தேன் என்பதும், அதற்கு நிறுவனம் ஒரு வாய்ப்பாக இருந்தது என்பதும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அதுபோலவே, வேலை தேடி நாடிய பல நூறு நண்பர்களுக்கு அவர்களின் தேவையை நிறைவு செய்ய முடியாமல் போனதில் எனக்கு மிகுந்த வருத்தமும் உண்டு. ஊடகத்துறையில் இது எனது 25-ம் ஆண்டு. தினமணி, தி ஹிந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான் கிரானிக்கள், புதிய தலைமுறை என நீண்ட பயணத்தில், நியூஸ்18  மறக்கமுடியாத பல அனுபவங்களைத் தந்தது. ஓர் ஊழியனுக்கும் நிறுவனத்துக்கும் உள்ள உறவு என்பதைத் தாண்டி, நிறுவன ஆசிரியராக நியூஸ்18 உடனான எனது பிணைப்பு உணர்வுப்பூர்வமானது. பத்திரிகையாளனாக, நெறியாளனாக அறியப்பட்ட என்னை, ஓர் ஆசிரியனாக உயர்த்தியதும், ஒரு பிரம்மாண்டமான நிறுவனத்தை, இளைஞர் சக்தியைக் கொண்டு வெற்றிகரமாக கட்டி எழுப்பி வழிநடத்திட முடியும் என்ற நம்பிக்கையை எனக்குள் விதைத்ததிலும் நியூஸ்18-ன் பங்கு அளப்பரியது. ஒரு தேசிய அளவிலான குழுமத்தில் தொழில் ரீதியில் கற்றுக்கொண்ட அனுபவங்கள் ஏராளம். 

தனி மனித வாழ்விலும், நிறுவனங்களின் போக்கிலும் மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை. காலத்தின் போக்கில் நிகழும் எந்த மாற்றத்தையும், கசப்பின் வடுக்களின்றி கடந்து செல்வதே சிறப்பானது. ஆம். நியூஸ்18 தமிழ்நாடு ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். இதுவரை நீங்கள் காட்டிவந்த மாசற்ற அன்புக்கும், அளித்துவந்த ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி. மக்கள் நலனே ஊடகப் பணி. நிறைய படியுங்கள். எதையும் திறந்த மனதுடன்  அணுகுங்கள். தமிழ்நாட்டின் தனித்தன்மையான உளவியலை கற்றுணருங்கள். உற்சாகமாக, கடினமான உழைப்பை ஈடுபாட்டுடன் நல்குங்கள். முதல் தலைமுறையில் ஊடக வாழ்வைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்களுக்கு, அவர்களது அறி வும், உழைப்பும் நேர்மையும் அர்ப்பணிப்புமே வாளும் கேடயமும்! உண்மையைத் தேடும் பயணத்தில், ஊடக அறத்தைப் பின்பற்றி தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.