tamilnadu

img

மேடை நாடகங்களில் 40 ஆண்டு அனுபவம்

 (மேடைநாடகங்களுக்கு மக்களிடம் பெரிய வரவேற்பில்லை என்று பொதுவாக பேசப்பட்டாலும் சென்னையில் சபாக்கள் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆரவாரம் இல்லாமல், சுவரொட்டிகள் பேனர்கள் இல்லாமல் நாடகங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மேடைநாடகங்களில் நாற்பதாண்டு அனுபவங்களைத் தீக்கதிருடன் பகிர்ந்து கொள்கிறார் நாடக எழுத்தாளர், இயக்குநர் அகஸ்டோ.)

   உங்களின் முதல் நாடகம் எப்போது அரங்கேறியது?

  அகஸ்டோ: 1979 ஆம் ஆண்டு “எனக்கோர் உடல் வேண்டும்” நாடகத்தோடு எனது பணி தொடங்கியது. இந்த நாடகம் மயிலாப்பூர் ஆர்.ஆர்.சபா எனும் ரசிகரஞ்சனி சபாவில் நடைபெற்றது. சன் மூன் ஸ்டார் ஸ்டேஜ் என்ற குழுவின் பெயரில் நடத்தினோம். இந்த நாடகத்தின் எழுத்துதான் என்னுடையது. இயக்கியவர் என். புனிதன்.இவர் சென்னை மாநகராட்சியில் வருவாய்த் துறை அதிகாரியாக இருந்தார். இரண்டு ஆண்டுக ளுக்குப் பிறகுதான் “இருட்டல்ல நிழல்” என்ற இரண்டாவது நாடகம் அரங்கேறியது. 

 அகஸ்டோ என்பது உங்களின் இயற் பெயரா ? அல்லது புனைப்பெயரா ?

 அகஸ்டோ: புனைபெயர் தான்.  இயற்பெயர் புருஷோத்தமன்.  வானொலி நாடகங்கள் எழுதியபோது இயற்பெயரில்தான் எழுதினேன்.  இன்னொரு புருஷோத்தமனும் எழுதியதால் குழப்பத்தைத் தவிர்க்க புனைபெயர் தேவைப்பட்டது.  நான் 1947 ஆகஸ்ட் 27 ல்  பிறந்தேன். அதனால் மாத அடிப்படையில் அகஸ்டோ என்று பெயர் வைத்துக் கொண்டேன்.  அதன் பிறகுதான் நாடகங்கள் தயாரிப்பு அகஸ்டோ கிரியேஷன்ஸ் என்றானது.  

  நாடகத்துறையை நீங்கள் தெரிவு செய்தது விருப்பத்தின் பேரிலா?  தற்செயல் நிகழ்வா ? 

அகஸ்டோ: சிறுகதைகள், நாவல் எழுதுவது தான் எனது அடிப்படை விருப்பம். நாடகத்தில் ஒலி, ஒளி அமைப்போடு கதைமாந்தர்கள் பார்வையாளர்கள்முன் தோன்றி நடிப்பது எனக்குப் பிடித்திருந்தது.  அதனால் நாடகத் துறையைத் தெரிவு செய்தேன். என்றாலும் சிறுகதை,  நாவல் எழுதும் விருப்பம் இப்போதும் உள்ளது.  ஆனால் நாடக எழுத்தைவிட்டு வெளி யேவர இயலாமல் உள்ளது. 

 இதுவரை எத்தனை நாடகங்கள் எழுதி, இயக்கி இருக்கிறீர்கள்?

அகஸ்டோ :  நாற்பதுக்கும் அதிகமான நாடகங்கள் எழுதி இருப்பேன்.  எல்லாவற்றையும் நானே இயக்கியதாக சொல்ல முடியாது. சில நாடகங்கள் என்னால் எழுதப்பட்டு மற்றவர்களால் இயக்கப்பட்டவை. 

 மேடை நாடகங்களில் மட்டும் செயல்படுகிறீர்களா? பிறவகை  நாடகங்களுமா? 

அகஸ்டோ:  ஏற்கெனவே சொன்னதுபோல் வானொலி நாடகங்கள் 10 க்கும் அதிகமாக எழுதியிருக்கிறேன்.  “இருட்டல்ல நிழல்” உட்பட பொதிகை தொலைக்காட்சிக்கு 20  நாடகங்கள் எழுதியிருக்கிறேன். 8 தொலைக்காட்சித் தொடர்களுக்கு வசனம் எழுதி இருக்கிறேன். 

 நாடகப் பிரபலங்களில் நீங்கள் எழுதிய நாடகங்களில் நடித்தவர்கள் பற்றி சொல்லமுடியுமா ? 

 அகஸ்டோ:  காத்தாடி ராமமூர்த்தி, வி.எஸ். ராகவன், கவர்ச்சி வில்லன் கண்ணன் ஆகியோ ருக்கு நாடகங்கள் எழுதிக் கொடுத்திருக்கிறேன். 

 அகஸ்டோ ஆப்டிகல்ஸ் என்ற கண்ணாடிக்கடையும் நடத்துகிறீர்கள்.  அந்தச் சூழலில் நாடகம் எழுத தனி நேரத்தை ஒதுக்கிக் கொள்வீர்களா? 

அகஸ்டோ:  அப்படி எல்லாம் இல்லை. எப்போது எழுதத் தோன்றுகிறதோ அப்போ தெல்லாம் எழுதுவேன்.  நாடகத்தின் மையக் கருவை தீர்மானித்துவிட்டால் அதற்கான கருத்துக்களை சேகரிப்பேன்.  பின்னர் எழுதத் தொடங்கிவிடுவேன்.  கடைப்பணியில் ஓய்வு கிடைக்கும்போதும் எழுத்துப்பணி தொடரும்.

 மேடை நாடகங்கள் என்றால் துணுக்குத் தோரணங்கள் என்ற கருத்து பொதுவாக இருக்கிறது. உங்கள் நாடகங்கள்......
அகஸ்டோ:  எதைப்பற்றியும்  பொதுவான கருத்து ஒன்று இருக்கும் . இது தானாகவும் உருவா கலாம்.  உருவாக்கப்படுவதும் உண்டு.  எனது நாடகங்களில்  சமூகத்திற்கு ஒரு செய்தி - மெசேஜ் இருக்க வேண்டும் என்று விரும்புகி றேன்.  இதுவரை அதற்கு நியாயம்  செய்திருப்ப தாக நம்புகிறேன். “பர்சுக்குள் பலம்” என்ற  எனது தொடக்ககால நாடகம், மூட ( சிந்தனையற்ற ) நம்பிக்கைக்கு எதிரானது.  தன்னிடமுள்ள ஒரு பர்சுதான் அட்சய பாத்திரம் போல் உதவி செய்கிறது என்று ஒருவர் நம்புவார். அதற்காக அதனை ஆயிரம் ஒட்டுபோட்டு பாதுகாப்பாக வைத்திருப்பார்.  ஒருநாள் அது காணாமல் போய்விடும்.  ஆரம்பத்தில் அதற்காகக் கவலைப்பட்டாலும் பிறகு,  வேறு ஒரு பரிசு வாங்கி வாழ்க்கையை நடத்துவார்.  அப்போதும் அவருக்கு திருப்தி தான். அந்தப் பர்சை வேண்டு மென்றே ஒளித்துவைத்த நண்பர் சிறிதுகாலம் கழித்து அதனைக் காட்டுவார். ஆனாலும் அந்தப் பர்ஸ் மீது அவருக்குப் பழைய  ஈடுபாடு வராது. இப்போதுள்ள பர்சும் உதவியாகத்தானே இருக்கிறது என்று நினைப்பார்.  மாறுகின்ற  மனிதமனம்  பற்றி பேசுவதாக இது இருக்கும்.   எனது நாடகங்களில் மிகைப்படுத்தல் இருக்காது.  எதார்த்தமான திருப்புமுனைகள் தான் இருக்கும். சோவியத் கதைகள், புதுமைப்பித்தன், கு.பா.ராஜகோபாலன்,  கி. ராஜநாராயணன் போன்றோரின் கதைகள் படித்ததில் கிடைத்த எதார்த்தம்தான் இதற்குக் காரணம். 

 உங்கள் நாடகங்களில் புதுமை முயற்சிகள் ஏதாவது செய்திருக்கிறீர்களா? 
அகஸ்டோ: வீடியோஸ்கோப் என்ற நாடக முயற்சியை நாங்கள் செய்தோம். இந்தியாவி லேயே இதுதான் முதல் முயற்சியாகப் பேசப்பட்டது.  வீடியோ காட்சியும் மேடைக் காட்சியும் பொருந்திச் செல்வதாக அமைத்தோம்.  உதாரணமாக,  விமானம் பறந்து வருவது வீடியோவில் வந்தால் , அதிலிருந்து கதாபாத்திரம் இறங்குவதுபோல் மேடைக்காட்சியை அமைத்தோம். இது பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.  இதேபோல் “நாகம்மாள் பாடசாலை” என்ற நாடகத்தில் ஒரே சமயத்தில் இரண்டு கதைகள் இணையாகச் செல்லும். வேறு வேறு காட்சிகள்,  வேறு வேறு கதை ஒற்றை முடிவை நோக்கிச் செல்லும் . இதுபோல் வேறு யாரும் முயற்சி செய்ததாகத் தெரியவில்லை. 
 

  தங்களின் அண்மைக்கால படைப்பு பற்றி.....

 அகஸ்டோ : “வானவில்லின் அம்புகள்” என்ற நாடகம் எனது அண்மைக்கால படைப்பு.  திறமை என்பது ஜீனிலிருந்து, அதாவது பாரம்பரிய மரபிலிருந்து வருகிறது என்று கூறப்படுவது அபத்தமானது.  பயிற்சியால் யாருக்கும் எதுவும் வசப்படும் என்பதுதான் இதன் கதைக்கரு.  பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 

  தங்களின் தொடர் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள் 
 

அகஸ்டோ : மிக்க நன்றி

 நேர்காணல் : மயிலைபாலு