ஜெய்ப்பூர்:
பிரதமர் மோடி பங்கேற்ற தேர்தல் பிரச்சார பேரணிக்காக பாதுகாப்பு காரணங்களைக் கூறி மூந்நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்ட மாக்கப்பட்டன. ஜெய்ப்பூர் மான சரோவர் அருகில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் மே முதல்நாளில் புல்டோசர் மூலம் அந்த வீடுகளை தரைமட்டமாக்கி மோடிக்கு மேடை அமைத்ததாக தி வயர் இணைய இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 30 அன்று இராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் வி.டி.சாலை அருகில் குடிசைப்பகுதி அருகில் உள்ள திடல் மோடியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அங்கு வந்த காவல் துறையினர் தெரிவித்தனர். அடுத்த சில நிமிடங்களில் அங்கு வசிப்பவர்கள் வெளியேறவும் உத்தரவிட்டனர். ஆனால், மாற்று இடம் இல்லாமல் மக்கள் திகைத்து நின்றனர். எனினும், புல்டோசருடன் குடியிருப்புகளை அகற்ற அவர்கள் களமிறங்கியபோது சிலரால் மட்டுமே அவர்களது உடமைகளை பாதுகாக்க முடிந்தது.
வீடுகள் முழுமையாக தகர்க்கப்பட்ட நிலையில் வேறு எங்கு செல்வது எனத் தெரியாத அவதிக்குள்ளானார்கள் இங்கு வசித்த மக்கள். வீடுகள் தகர்க்கப்பட்ட நிலையில் பொருட்களை வழியோரங்களில் வைத்துள்ளனர். அவற்றை கவனிக்காமல் வேலைக்கு சென்றால் அனைத்தையும் இழக்க நேரிடும் என்கிற அச்சத்தில் உள்ளனர். காவல்துறையினர் தங்களை இந்த பகுதியிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றி விடுவார்களோ என்கிற பீதியும் அவர்களிடம் உள்ளது.குடியிருக்க மாற்று இடமில்லை. சாலை ஓரங்களில் வசிப்பவர்கள் என்பதற்காக குப்பை மேட்டில் வசிக்க முடியாது என்கிறார்கள் அவர்கள். குப்பை கூழங்கள் நிறைந்து மிகவும் அழுக்கடைந்த பகுதியாக இது உள்ளது. உணவு சமைக்ககூட முடி யாமல் அவதிப்படுகிறோம். பாத்திரங்கள் எல்லாம் துர்நாற்றம் வீசத் தொடங்கிவிட்டன என்று அங்கு வசிக்கும் லட்சுமி கூறிய வார்த்தைகள் தி வயர் இணைய இதழின் செய்தியில் இடம்பெற்றுள்ளன. உணவு சமைத்து நான்கு நாட்கள் ஆகிவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரியில் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தபோது பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல விடாமல் தடுக்கப்பட்டனர். அதே பாதுகாப்பு காரணங்களைக் கூறி மோடி போகும் இடம் எல்லாம் மக்களுக்கு தொல்லை தரப்படுகிறது. ஜெய்பூரிலோ குடியிருப்புகளையே இடித்து தடைமட்டமாக்கியுள்ளனர்.