tamilnadu

img

தனியாருக்கு போகும் 2 எண்ணெய் கிணறுகள்?

அகமதாபாத்:
பயன்பாடற்ற இடங்களை விற்பனை செய்கிறோம் என்ற பெயரில், ஓஎன்ஜிசி (Oil and Natural Gas Corporation -ONGC) நிறுவனத்திற்குச் சொந்தமான 2 எண்ணெய்க் கிணறுகளை, தனியாருக்கு விற்கும் முயற்சியில் மோடி அரசுஇறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுதொடர்பான விவரங்கள் வருமாறு:

மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச்சொத்து நிர்வாகத்துறையானது, சுருக்கமாக ‘டிபம்’ (Department of Investment and Public Asset Management - ‘DIPAM’) என்று அழைக்கப்படுகிறது. இது மத்திய அரசிடம் அண்மையில் பரிந்துரை ஒன்றை வழங்கியிருக்கிறது. அதாவது, பொதுத்துறை நிறுவனங்களிடம் இருக்கும் பயன் பாடற்ற சொத்துக்களை விற்கலாம் என்பதுதான் அந்த பரிந்துரையாகும். இதன்படி, பாரத் பெட்ரோலியம் வசமுள்ள விளையாட்டுக் கழக மைதானங்கள், ஓஎன்ஜிசி-க்கு சொந்தமாக அகமதாபாத், பரோடாவில் உள்ள கோல்ப்மைதானங்கள் ஆகியவற்றை விற்கலாம் என்பதும் ‘டிபம்’ அமைப்பின் பரிந்துரையாகும். இதில்தான் பிரச்சனை எழுந்துள்ளது.அகமதாபாத் நகரிலுள்ள ஓஎன்ஜிசி-யின் கோல்ப் மைதானம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த நிறுவனத்தின் உயர்அதிகாரிகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டது என்றாலும், மைதானம் அமைக்கப்பட்டதற்கு வேறு சில காரணங்களும் இருந்தன.அகமதாபாத் நகரில் எண்ணெய்வளம் இருக்கும் இடங்கள் கண்டறியப்பட்ட போது, அந்த இடங்கள் வேறுசிலரின் பயன்பாட்டிலும், ஆக்கிரமிப்புகளிலும் இருந்தன. அவர்களை வெளியேற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. அவர்கள் வெளியேற்றப்படவும் செய்தனர். 

ஆனால், இடம் வெறுமனே விடப்பட்டால், எங்கே மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டு விடுமோ? என்று நினைத்த ஓ.என்.ஜி.சி. நிறுவனம், எண்ணெய் வளம் உள்ளபகுதிகளைப் பாதுகாப்பதற்காகவே கோல்ப் மைதானத்தை அமைத்தது. அதன்படி எண்ணெய்க் கிணறுகளைச் சுற்றியே கோல்ப் மைதானம் அமைந்திருக்கிறது.இந்த கோல்ப் மைதானத்தைத்தான், பயன்பாடற்ற நிலம் என்ற பெயரில், தனியாருக்கு விற்பதற்கு மத்திய அரசுக்கு ‘டிபம்’ பரிந்துரைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.‘டிபம்’ பரிந்துரையின் படி, ஓ.என்.ஜி.சி.யின் மைதானம் விற்பனை செய்யப்பட்டால், அந்த மைதானத்திற் குள் உள்ள எண்ணெய்க் கிணறுகளும் தனியார் வசமாகி விடும். சட்டப்படி பார்த்தால், ஓ.என்.ஜி.சி. தனது எண்ணெய்க் கிணறுகளை விற்க முடியாதுதான். ஆனால், அதையெல்லாம் தாண்டி, எண்ணெய்க் கிணறுகள் இருக்கும் மைதானத்தைத் தனியாருக்கு விற்பதற்கு நிதி ஆயோக், எண்ணெய் வள அமைச்சகம் ஆகியவை ஒப்புதல் அளித்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

;