தருமபுரம் ஆதீனத்திடம் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக பணம் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாவட்டத் தலைவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தை தற்போது தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியா சுவாமிகள் நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில் தருமபுரம் ஆதீனத்திடம் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவராக உள்ள அகோரம் உள்ளிட்ட 9 பேர் பணம் கேட்டு மிரட்டியதாக ஆதீனத்தின் சகோதரரும், உதவியாளருமான விருதகிரி அளித்த புகாரில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், திருக்கடையூர் விஜயகுமார், மடத்தின் பணியாளர் செந்தில் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அகோரம் மீது ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், தலைமறைவான 5 பேரை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.