tamilnadu

டாஸ்மாக்கில் கொள்ளை வாட்ச்மேன் கதி என்ன? 

மதுரை:
மதுரை வாடிப்பட்டி அருகே டாஸ்மாக் கடையை துளையிட்டு பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற நபர்கள்கடையின் காவலாளியை என்ன செய்தனர் எனத் தெரியவில்லை. இதுகுறித்து காவலாளியின் குடும்பத்தினர் காவல்துறையில் புகாரளித்துள்ளனர்.

வாடிப்பட்டியை அடுத்துள்ள குட்லாடம்பட்டி சாலையில் செம்மினிப்பட்டி என்ற இடத்தில் அரசு மதுபானக் கடை உள்ளது. இங்கு கச்சைகட்டியைச் சேர்ந்த சந்தனம் மகன் எஸ்.கணேசன் (45) கடந்த இரண்டு வருடங்களாக இரவு காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். சனிக்கிழமை இரவு 12 மணியளவில் ரோந்து வந்தகாவல்துறையினர் கணேசனிடம் வழக்கம்போல் கையெழுத்து பெற்றுச்சென்றுள்ளனர். 

அதற்குபின்னர் கடைக்கு வந்த கொள்ளையர்கள் கடையை துளையிட்டு மதுபான பாட்டில்களை கொள்ளையடித்துள்ளனர். சத்தம் கேட்டு எழுந்த கணேசனை கொள்ளையர்கள் என்ன செய்தனர் எனத் தெரியவில்லை. கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டனர். மதுபானக்கடைக்கு காவல்துறையின் மோப்பநாய் வந்து சென்றது. அது யாரையும் பிடிக்கவில்லை. இதற்கிடையில் கணேசனின் குடும்பத்தினர் அருகிலுள்ள கிணறுகள், வயல்வெளிகளில் அவரை தேடிவருகின்றனர். கணேசன் மனைவி தமிழரசி தனது கணவரை காணவில்லை என வாடிப்பட்டி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது.

;