திருச்சிராப்பள்ளி, மார்ச் 1- மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் அகில இந்திய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்துவது என்று சிஐடியு மாநில நிர்வாகக்குழு முடிவு செய்துள்ளது. சிஐடியு தமிழ்நாடு மாநில நிர்வாக குழுக்கூட்டம் திருச்சி உறையூரில் உள்ள மெடிக்கல் சங்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமை தாங்கினார். மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு, துணைப் பொதுச்செயலாளர்கள் குமார், திருச்செல்வம், எஸ்.கண்ணன் உட்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிஐடியு மாநில நிர்வாகக்குழு அழைப்பு
தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் 4- ஐ கைவிட வேண்டும். மின்சார சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க கூடாது. போதிய வருவாய் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.7500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் அனைத்துப் பகுதி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களை பங்கு பெற செய்து வேலை நிறுத்தத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மார்ச் - 8 சர்வதேச பெண்கள் தினத்தை உழைக்கும் பெண்கள் தினமாக கொண்டாடுவது. திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, சென்னை மண்டலங்களில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடத்துவது. தர்மபுரியில் இயங்கிவரும் ஹட்சன் தனியார் பால் நிறுவனத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு உடனே வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.