லிமா, மார்ச் 25- பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான கட்டணங்களுக்கு விலக்கு அளித்து, இலவசமாக அனுமதி தருவதற்கான மசோதா பெருவில் தயாரிக்கப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில் இடது சாரிக் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட பெட்ரோ காஸ்டில்லா வெற்றி பெற்று ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கிறார். பெரு நாட்டின் கல்வி குறித்து முக்கியமான மாற்றங்களை செய்வோம் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதிகளை அளித்திருந்தார். தற்போது பொறுப்பேற்றபிறகு அதற்கான வேலைகளைத் துவங்கியுள்ளார். அதன் முதல்கட்டமாக பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற கட்டணங்கள் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்பதற்கான மசோதாவைக் கொண்டு வருகிறார்கள். பெரு நாட்டின் கல்வித்தரம் மிக மோசமான நிலையில் இருக்கி றது. இரண்டு முக்கியமான சவால்கள் உள்ளன. ஒன்று, பணம் இருந்தால்தான் பல்கலைக்கழகங்களில் படிக்க முடியும் என்ற நிலை உள்ளது.
இரண்டாவது, பொதுவாகவே கல்வியின் தரம் மிகவும் மோசமாக இருக்கிறது. இந்த இரண்டையும் சமாளிப்போம் என்று பெட்ரோ காஸ்டில்லா உறுதியளித்திருக்கிறார். 30 விழுக் காட்டினர்தான் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை நிறைவு செய்து விட்டு, பல்கலைக்கழகங்களில் சேருகிறார்கள். இந்த எண்ணிக்கையை உயர்த்தவே கட்டணமில்லா படிப்புக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காஸ்டில்லா, “அமைச்சரவையும், கல்வித்துறையும் இதற்கான மசோதாவைத் தயார் செய்துள்ளது. நாடாளுமன்றத்தின் முன்பாக இது வைக்கப்படும். இதன் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் பணி செய்வோம். இந்த இடத்திலிருந்து பின்னோக்கிச் செல்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அவ்வாறு எங்களை செல்ல வைக்க யாராலும் முடியாது” என்றார். கொரோனா பெருந்தொற்றால் பள்ளிக்கூடங்கள் ஆன்லைன் வகுப்புகளாக மட்டுமே இரண்டு ஆண்டுகள் நடைபெற்றன. “ஒரு மாணவர் கூட வீட்டில் தங்கி விடாமல், அனைவரையும் மார்ச் 28 ஆம் தேதிக்குள் பள்ளிக்கூடத்திற்கு வர வைத்து விடுவோம். ஏற்கனவே 40 லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு வந்துவிட்டார்கள்” என்று காஸ்டில்லா கூறியுள்ளார். அதேவேளையில், கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன.