tamilnadu

img

பொய்வழக்கில் சிறையில் அடைப்போம் காவல்துறை மிரட்டல்: விளக்கமளிக்க உத்தரவு

மதுரை:
கணவன் மீது பொய் வழக்கு போடப் போவதாகக் கூறி காவலதுறையினர் மிரட்டுகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மனைவி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மதுரையை சேர்ந்த யாஸ்மின்  சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:-கடந்த 2017-ஆம் ஆண்டு எனது கணவர் ராஜா உசேன் வழக்கு ஒன்றில் 23 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். கடந்த மார்ச் மாதம் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தனது கணவர் மீது பொய் வழக்குப் பதியப்பட்டு  பிணையில் வெளியே வந்தார். காவல் நிலையத்தில் எனது கணவர் , எனது மகனை துன்புறுத்தியதில் கை கால்களில் காயங்கள் இருந்தன. இது தொடர்பாக மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளேன். 

மதுரை சட்ட ஒழுங்கு இணை ஆணையர் எனது கணவருக்கு ஒரு வழக்கில் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பினார். இந்த நிலையில் காவல்துறையினர் எனது உறவினர்கள் வீட்டிற்குச் சென்று எனது கணவரை எவ்வித அனுமதிக் கடிதமின்றி தேடி வந்துள்ளனர். இதனால் அவர்கள் மிக மன வேதனையில் உள்ளனர். எனது கணவரை மீண்டும் சிறையில் அடைக்க காவல்துறையினர் பலவகையில் முயற்சி செய்து வருகின்றனர். எனது கணவர் காவல் நிலையத்துக்கு  விளக்கம் அளிக்க நேரில் சென்ற போது அவரை மிக தரக்குறைவாக காவல்துறையினர் பேசியுள்ளனர், கண்டிப்பாக மறுபடியும் சிறையில் அடைப்போம் என மிரட்டுகின்றனர்.இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது, விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் அதையும் மீறி  மீண்டும் காவல் துறையினர் எனது வீட்டிற்கு வந்து எனது கணவரை கண்டிப்பாக சிறையில் அடைப்போம் என என்னை மிரட்டினர். என்னை மிரட்டிய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது கணவரின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பி உள்ளேன். எனவே என்னையும், எனது கணவரையும் எனது உறவினர்களையும்  மிரட்டி, எனது கணவரை மீண்டும் சிறையில் அடைப்பேன் எனக் கூறி வரும் காவல்துறை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் புகார் குறித்து தமிழக காவல்துறை தலைவருக்கு  நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம் மதுரை மாநகர காவல்துறை துணை ஆணையர் மற்றும் காவல்துறை ஆய்வாளருக்கு மனுதாரரை விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தி வழக்கு விசாரணையை நவம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.