இந்திய ஜனநாயகத்தின் மிகச் சிறந்த வழிகாட்டிகளில் ஒன்றாக நிலைகொண்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) இன்று கடுமையான சவாலுக்கு உள்ளாகியிருக்கிறது. 2005-ம் ஆண்டு இயற்றப்பட்ட இச்சட்டம் மக்களுக்கு அரசின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கும் அரிய வாய்ப்பை வழங்கியது. மக்கள் தங்கள் அடிப்படை உரிமைக்காகப் போராடி அறியப்பட்ட இந்தச் சட்டம் இன்று பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. தகவல் ஆணையங்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டு, நியமனங்கள் நிறுத்தப்பட்டு, தகவல் பெறு வோருக்கு அச்சுறுத்தல்கள் வரும் வகையில் சட்டம் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசாங்கம் தொடர்ந்து தகவல் ஆணையத்தின் சுயாட்சியைக் குலைக்கும் வகையில் சட்ட மாற்றங்களைச் செய்து வருகிறது. 2019-ல் நிறைவேற்றிய சட்டத் திருத்தம் தகவல் ஆணையங்களின் சுயாட்சியைக் கேள்விக் குறியாக்கிய அதே நேரத்தில், 2023-ல் கொண்டு வரப்பட்ட டிஜிட்டல் தரவு பாதுகாப்புச் சட்டம் தனிப்பட்ட தகவல்கள் வெளியீட்டைக் கட்டுப் படுத்தும் வகையில் தகவல் உரிமைச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்திய சர்வதேச வெளிப்படைத் தன்மை (Transparency International India) அமைப்பின் தரவுகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட தகவல் அறியும் உரிமைப் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் மீது பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா தகவல் ஆணையத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்கள் தேங்கிக் கிடக்கின்றன. ஜார்க்கண்டில் ஆணையம் நான்கு ஆண்டுகளாகவும், திரிபுரா மற்றும் தெலுங்கானாவில் ஒன்றரை மற்றும் மூன்று ஆண்டுகளாகவும் செயல்படாமல் இருப்பது கவலைக்குரிய நிலைமை. ஆண்டுக்கு சுமார் 60 லட்சம் தகவல் உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது, மக்கள் தங்கள் அடிப்படை உரிமைக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. இது ஜனநாயகத்தின் சக்தியையும் எடுத்துக்காட்டு கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஜனநாயகத்தின் ஒரு மகத்தான கருவி. இதன் மீதான தாக்குதல்கள் நாட்டின் ஜனநாயக மரபை அடிமட்டமாகச் சீரழிக்கும் அபாயம் கொண்டவை. - அஞ்சலி பரத்வாஜ், அம்ரிதா ஜோஹ்ரி (தகவல் அறியும் உரிமை பிரச்சார தேசிய இயக்கம்) தி இந்து (ஆங்கிலம்)-வில் 14.10.2024 எழுதிய கட்டுரையின் தமிழ்ச் சுருக்கம் கடலூர் சுகுமாறன்
* ஆண்டுக்கு 60 லட்சம் தகவல் உரிமை மனுக்கள்
* 29 தகவல் ஆணையங்களில் 7 முடக்கம்
* 4 லட்சத்திற்கும் மேல் புகார்கள் தேங்கிக் கிடக்கும் அவலம்
* 11 மத்திய தகவல் ஆணைய பணியிடங்களில் 8 காலி
* 100-க்கும் மேற்பட்ட தகவல் உரிமைப் போராளிகள் படுகொலை
* 95% சட்ட மீறல்களுக்கு தண்டனை இல்லை