திருவனந்தபுரம், நவ.26- மற்ற மாநிலங்களைப் போல் கேரளாவில் விலை உயர்வு இல்லை என்றும், ஜிஎஸ்டி இழப்பை ஈடுசெய்யாதது சிரமத்தை ஏற்படுத்துகிறது என்றும் நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் கூறினார். ஒன்றிய அரசு கேரளத்தின் கடன் வரம்பை குறைப்பது மற்றொரு பிரச்சனை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அகில இந்திய வளர்ச்சி 8 சதவிகிதமாக உள்ளது. கேரளாவில் இது 12 சதவிகிதமாக உள்ளது. ஜிஎஸ்டி பங்கீட்டில் மாற்றம் வேண்டும் என்றும், அது ஒன்றிய அரசுக்கு 40 சதவிகிதம், மாநிலங்களுக்கு 60 சதவிகிதம் என்ற அளவில் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். செஸ் மற்றும் கூடுதல் கட்டணத்தை தள்ளுபடி செய்து வந்தே பாரத் ரயிலை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அமைச்சர் எழுப்பினார். பாரம்பரிய தொழில் துறை, தோட்டத் துறை மற்றும் புலம்பெயர்தோருக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்றும், ஊதிய திருத்தத்தை யுஜிசி இன்னும் அனுமதிக்கவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.