நில ஒருங்கிணைப்புச் சட்டம்
மயிலாடுதுறை, நவ.11 - ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில பொதுக்குழு கூட்டம் திங்களன்று மயிலாடுதுறையில் ஆர்.ஓ.ஏ அலுவலக கட்டிடத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், விவசாயிகள் சங்க (சிபிஐ) பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி, அகில இந்திய விவசாயிகள் சங்க மகா சபையின் (சிபிஐஎம்எல்) சந்திரமோகன், செயற்குழு உறுப்பினர்கள் பொன்னையன், இளங்கீரன், மேரிலில்லி மற்றும் பொறுப்பாளர்கள் பாஸ்கரன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜி.ஸ்டாலின், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், விவசாயிகள் சங்கத்தின் தமிழ்மணி, ஐஏஐடியுசி தில்லைவாணன் உள்ளிட்டோர் உரையாற்றினர். கூட்டத்தில், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் செயல்பாடுகள் குறித்தும், மாநில அமைப்பின் முடிவுகளை செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் நன்றி கூறினார். பின்னர் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “தில்லியில் ஓராண்டுக்கும் மேலாக ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் போராட்டம் நடைபெற்றது. பாஜக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம் என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்து, நான்கு ஆண்டுகளாகி விட்டன. இந்நிலையில், வரும் காலங்களில் தமிழ்நாட்டில் அது குறித்து மக்களிடையே பிரச்சாரம் செய்து, மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிப்பது,
இந்தியாவில் உள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் இணைந்து, தமிழகத்தில் நவ.26 அன்று விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், அனைத்து ஜனநாயக சக்திகளையும் இணைத்து பெருந்திரள் போராட்டம் நடத்த உள்ளோம். தமிழக அரசாணையில் வெளியான நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த உள்ளோம். தமிழக அரசு நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். நிலம் ஒருங்கிணைப்புச் சட்டம் என்பது, சிறப்பு திட்டங்கள் என்ற பெயரில், தனியார் முதலாளிகள், கார்ப்பரேட்டுகள் கேட்டால் பொதுமக்கள், விவசாயிகளிடம் இருக்கும் 250 ஏக்கருக்கு மேல் நிலத்தை எடுத்து கொடுக்கும் திட்டமாகும். மோடி அரசு கொண்டு வந்த ஒருங்கிணைப்புச் சட்டத்தைவிட இது மிகவும் மோசமான சட்டம். 250 ஏக்கர் நிலத்தில் நீர்வளங்களான குளம், ஓடை, ஆறுகளாக இருந்தாலும்கூட அவையாவும் அந்த முதலாளிகளுக்கு, கார்ப்பரேட்டுகளுக்கு சொந்தமானதாகி விடும். குளம், ஆறு என்பது தண்ணீர் மட்டுமல்லாது அருகில் உள்ள கிராமங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அதனை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்தால், கிராம மக்களின் வாழ்வாதாரம் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இத்திட்டம் வளர்ச்சி கருதி கொண்டு வரப்படுகிறது என்று கூறுகிறார்கள். மக்களின் வளர்ச்சியா-கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியா என்ற கேள்வி எழுகிறது. எந்த விவாதமுமின்றி தமிழக சட்டசபையில் நில ஒருங்கிணைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். எனவே இந்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வருகிறோம். அதுவரை எங்கள் பரப்புரை போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.