மதுரை, ஏப்.1- எத்தனை மாடல்கள் இருந்தாலும் இந்திய மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கக்கூடியது இடதுசாரி மாடல்தான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கூறினார். மதுரை என்.நன்மாறன் திடலில் புதன்கிழமை நடைபெற்ற 23ஆவது மாநில மாநாட்டுப் பொதுக் கூட்டத்தில் உ.வாசுகி பேசியதாவது: கம்யூனிஸ்ட்டுகள் பிழைக்கத் தெரியாதவர்கள் அல்ல, அரசியலை பிழைப்பாக நடத்த மறுப்பவர்கள். உழைக்கும் மக்களை உறிஞ்சி ஒட்டுண்ணியாக இருப்பதற்கு மாறாக ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களுக்கான பேரியக்கம் இது. மக்கள் பிழைப்பதற்கு, அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, வளமான வாழ்க்கை கிடைப்பதற்கான அரசியலை முன்வைத்துக் கொண்டிருக்கிறோம். அதேபோல் உண்டியல் குலுக்கிகள் என்கிறார்கள், ஆம் நாங்கள் சூட்கேஸ் குலுக்கிகள் அல்ல. முதலாளிகளிடம் பெட்டி வாங்கக்கூடியவர்கள் அல்ல. தேர்தல் பத்திரம் என்ற பெயரில் வசூலிக்கப்படும் கோடிக்கணக்கான ரூபாயில் 94 சதவிகிதம் பாரதிய ஜனதா கட்சியின் கஜானாவுக்குப் போகிறது. எனவே மோடி, அமித் ஷா, அண்ணாமலை போன்றவர்கள் நம்மை விமர்சிக்க அருகதை இல்லாதவர்கள். எங்களை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று விமர்சிக்கிறார்கள். யாருடைய வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்பதுதான் கேள்வி. நாங்கள் அதானி, அம்பானி வளர்ச்சிக்கு நிச்சயம் எதிரானவர்கள். மோடி பதவிக்கு வந்தபோது பெருமுதலாளிகளின் முதல் 10 பேருக்குள் இல்லாமல் இருந்த அதானி இப்போது ஆசியாவின் முதல் பெரும் பணக்காரராக மாறியிருக்கிறார்.
இப்படி கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான அரசாக மோடி அரசு இருக்கிறது. சாமானியர்களுக்கு சாதகமாக இல்லை. நாங்கள் சாமானியர்கள் வளர்ச்சிக்கு ஆதரவானவர்கள். புறம்போக்கு, நீர்நிலைப் பகுதிகள் என்று 50 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை, எளிய உழைப்பாளி மக்கள் வாழும் இடங்களில் இருந்து அகற்றப்பட்டால் அது வளர்ச்சி இல்லை. நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றங்கள் வெறும் தொழில்நுட்ப ரீதியாகப் பார்க்கிறார்கள். தமிழக அரசு நீதிமன்றத்தில் இந்த ஏழை, எளிய மக்களுக்கு சாதகமாக குரல் எழுப்புவதுதான் வளர்ச்சி. இயற்கை வளங்களை வனம், வனப் பொருட்கள் ஆகியவற்றை மலை வாழ் மக்களின் வன உரிமைகளைத் தட்டிப் பறித்து பேசுவது வளர்ச்சியல்ல. நிச்சயம் இதுபோன்ற வளர்ச்சிக்கு எதிராகப் பேசுவோம். காவிரி டெல்டாவை ரசாயன மண்டலமாக மாற்றுவது வளர்ச்சி என்றால் அதை எதிர்ப்போம். பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக காவிரி டெல்டா நீடிப்பதற்கு எத்தனை போராட்டம் நடத்த வேண்டியிருந்தாலும் அதில் முன்வரிசையில் நாங்கள் இருப்போம்.
கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக சித்தாந்த ரீதியாக இருப்பார்கள் என்பதைத்தான் கம்யூனிஸ்ட்டுகள் வளர்ச்சிக்கு எதிராக இருப்பவர்கள் என பட்டம் கட்டுகிறார்கள். கட்சி வளர்ச்சி என்பது எம்.பி., எம்எல்ஏ., கவுன்சிலர்கள் கணக்கை வைத்துத்தான் பார்க்க வேண்டுமா? அநீதி நடக்கும் இடத்தில் ஆண்டவன் வருகிறாரோ இல்லையோ, செங்கொடி இயக்கம் கட்டாயம் வரும். சாமானிய உழைக்கும் மக்களின் போராட்டத்தை உருவாக்க தியாகத்தில், அர்ப்பணிப்பில் முன்னணியில் இருக்கும் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. காவல் துறை தாக்குதல், சமூக விரோதிகள் தாக்குதலை எதிர்த்து போராடுவதில் எந்த கட்சி கம்யூனிஸ்ட் கட்சியை விட பெரிய கட்சி? குஜராத் மாடல், உ.பி. மாடல், திராவிட மாடல் என்று பல மாடல்களைப் பற்றி பேசப்படுகிறது. ஆனால் இடதுசாரி மாடலை விட உழைப்பாளி மக்களுக்கு விடுதலை கொடுக்கும் மாடல் வேறு எது உள்ளது? இடதுசாரி மாடல்தான் இந்திய மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடியது. எத்தனை மோடி, அமித் ஷா, அண்ணாமலைகள் வந்தாலும் கம்யூனிஸ்ட் இயக்கம் அஞ்சாது. இவ்வாறு உ.வாசுகி கூறினார்.