வளைந்து நின்ற மின் கம்பங்களுக்கு பதில் புதிதாக 2 மின் கம்பங்கள் அமைப்பு
தீக்கதிர் செய்தி எதிரொலி
பாபநாசம், மே 23- கும்பகோணம் - தஞ்சாவூர் முக்கிய சாலையில், பாபநாசத்தில் மெயின் சாலை வளைவில் மின் கம்பம் வளைந்த நிலையில் இருந்தது. இதனால் விபரீதம் நேரும் முன், மின்சார வாரியத்தினர் வளைந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு, புதிதாக மின் கம்பம் நடுவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி தீக்கதிர் நாளிதழில் வெளியானது. இதைத் தொடர்ந்து, வளைந்து நின்ற மின் கம்பத்தை அகற்றி விட்டு, புதிதாக மின் கம்பம் நடப்பட்டது. இதில் மின் வாரிய இளநிலை பொறியாளர் ரஞ்சித் குமார், மின் பாதை ஆய்வாளர் கோபால் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். இதே போன்று, பாபநாசம் - சாலிய மங்கலம் சாலையில் ரயில்வே கேட்டை தாண்டி, வயல் வெளியில் வளைந்த நிலையில் 2 மின்கம்பம், மின் கம்பத்திலிருந்து சென்ற மின்கம்பி வயலில் தாழ்ந்த நிலையில் இருந்தது. இது குறித்த செய்தி தீக்கதிரில் வந்த நிலையில், வளைந்து நின்ற 2 மின் கம்பங்களுக்கு பதில், புதிதாக 2 மின் கம்பங்கள் நடப்பட்டன.