சென்னை, ஜூன் 13- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வந்து சென்ற நிலை யில், அதிமுக - பாஜக கூட்டணியில் மீண்டும் உரசல் வெடித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே அதிமுக - பாஜக தரப்பு 2ம் கட்ட தலைவர்கள் வெளிப்படையாகவே பரஸ்பரம் விமர்சித்துக் கொண்டார்கள். எடப்பாடி பழனிசாமி கொடும்பாவி எரிக்கப்பட்டது. பிறகு, இந்த பிரச்சனை அப்படியே அமுக்கப்பட்டது. ஆனால், கூட்டணி விவகாரம் இழுபறியாகவே இருந்தது. தனித்து போட்டி என்று எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்தனர். இறுதியாக நடந்த ‘பஞ்சாயத்தில்’ அதி முக கூட்டணியை அமித்ஷா உறுதி செய்திருந்தார். எனினும், கடந்த 4 மாத காலமாக, அதிமுக - பாஜக மோதல் நீடித்தபடியே உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு அண்ணாமலையின் சீண்டலால் இந்த மோதல் மீண்டும் வெடித்து கிளம்பியது. இதையடுத்து, கொதித்து எழுந்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக் குமார், “இனியும் எங்க பேச்சுக்கு வந்தால் அண்ணாமலை வாங்கிக் கட்டிக் கொள்வார்.. அவருக்கு நாக்கு நீளம், கொஞ்சமும் நாவடக்கம் இல்லை. எங்கள் காலை மிதித்தால், நாங்கள் திரும்ப மிதிப்போம்” என்று ஆவேச மடைந்தார்.
அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் செவ்வாயன்று (ஜூன் 13) நடை பெற்றது. இக்கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழல், மக்களவைத் தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, சமீப காலமாக அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான பாஜக வுக்கு இடையே ஏற்பட்டுள்ள உரசல் குறித்து காரசாரமாக பேசப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியது பற்றியும் விவாதிக்கப்பட்டது. அண்ணாமலைக்கு எதிராக பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். இன்னும் பாஜக வுடன் கூட்டணியில் நீடிப்பது நல்லதல்ல என்று, பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் எனவும் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. சரியான தீர்வு கிடைக்காத பட்சத்தில் கூட்டணியை மறு பரிசீலனை செய்வது தொடர்பாக முடிவு செய்யப்படும் என நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்ணாமலைக்கு அனுபவம் இல்லை: எடப்பாடி
இதைத்தொடர்ந்து செய்தியாளர் களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “20 வருடங்களாக எம்.எல்.ஏ இல்லாத பாஜகவுக்கு 4 எம்எல்ஏக்களை பெற்றுத் தந்தது அதிமுக. வாஜ்பாய், அத்வானி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் ஜெய லலிதா மீது மரியாதை வைத்துள்ளனர். அண்ணாமலையின் பேச்சு மக்களிடமும், அதிமுகவினரிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்டு உள்நோக்கத்துடன் அவதூறு பரப்பும் கருத்தை அண்ணா மலை பேட்டியாக கொடுத்துள்ளார். அண்ணாமலை கருத்து அதிமுக வினருக்கு மனவேதனையை ஏற்படுத்தி யுள்ளது. அரசியல் அனுபவமும் முதிர்ச்சி யும் அற்றவர் அண்ணாமலை”என்று கடுமையாக சாடினார்.
சும்மா விடமாட்டோம்: செல்லூர் ராஜூ!
அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான செல்லூர் ராஜூ, “பாஜகவை பொறுத்தவரை மாநிலத் தலைவர் பதவி என்பது ஒரு பொம்மையை போன்றது. பொம்மையை எங்கு வேண்டு மானாலும் வைக்கலாம். கோமாளியாக வும் வைக்க முடியும்” என்று கொதித்தார்.
‘தரங்கெட்ட அண்ணாலை’: சி.வி.சண்முகம்
அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநி லங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம்,“ சாராயம் விற்பவர்கள், கொலை, கொள்ளை வழக்கில் தொடர் புடையவர்கள், பாலியல் வன் கொடுமை செய்தவர்கள் போன்ற குற்ற வாளிகளிடமும், பண மோசடி செய்தவர் களிடமும் பணம் பெற்றுக்கொண்டு கட்சியில் பொறுப்பு வழங்கிய தரங்கெட்ட அண்ணாமலைக்கும் பாஜக கட்சிக்கும் ஊழலைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதி யும் அருகதையும் இல்லை. ஒரு கவுன்சில ராகக் கூட இல்லாத அண்ணாமலை மீது அவரது கட்சியினரே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர்” என கடுமையாக விமர்சித்தார்.
பாஜகவினர் கொந்தளிப்பு
இந்த நிலையில், சென்னையில் செய் தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன்,“ தெர்மாகோல் செல்லூர் ராஜூ வாய்க்கு வந்ததை கோமாளித்தனமாக பேசி வருகிறார்” என்றார். அண்ணாமலை பற்றி பேசவும் விமர்சனம் செய்யவும் அதிமுகவின ருக்கு தகுதியும் அருகதையும் இல்லை என்றும் அண்ணாமலையை கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்ட த்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்ப்பதாகவும் கூறினார். அதிமுக நிறைவேற்றியுள்ள கண்டன தீர்மானத்தை ஏற்க இயலாது என்று மற்றொரு துணைத் தலைவர் நாரா யணன் திருப்பதியும், அண்ணாமலை பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நிதானமின்றி பேசுகிறார் என்று பாஜகவின் அமிர்பிரசாத் ரெட்டியும் கொந்தளித்துள்ளனர். இதன்மூலம் அதிமுக -பாஜக இடையே மீண்டும் மோதல் வலுத்துள் ளது. கூட்டணி தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.