tamilnadu

img

திருச்சி முக்கிய செய்திகள்

மறைந்த மாதர் சங்க தலைவர் மைதிலி சிவராமனுக்கு வீரவணக்கம்

அரியலூர், மே 30- அரியலூர் மாதாகோவில் பேருந்து நிறுத்தம் அருகில், மறைந்த மாதர் சங்க மாநில தலைவர் மைதிலி சிவராமனுக்கு மாதர் சங்கம் சார்பில், மாவட்டத் தலைவர் பி பத்மாவதி தலைமையில், வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில், சங்க மாவட்டப் பொருளாளர் மலர்கொடி, ஒன்றியச் செயலாளர் தனலட்சுமி, நிர்வாகிகள் சூரியகலா, துர்கா, கனிமொழி, செந்தொண்டர்கள் ரசிகா தன்சிகா, விஸ்வஜித் மற்றும் சிபிஎம் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர். மணிவேல், அரியலூர் ஒன்றியச் செயலாளர் அருண்பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

நூறு சதவீதம் தேர்ச்சி:  பள்ளித் தலைமை  ஆசிரியர்களுக்கு பாராட்டு

தஞ்சாவூர், மே 30-  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா, மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையிலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் முன்னிலையிலும் வியாழக்கிழமை நடைபெற்றது.  இதில், மாவட்ட ஆட்சியர், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி விழுக்காட்டினை அதிகப்படுத்தியுள்ள பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.  12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 19 அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 104 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகளுக்கும், சென்ற ஆண்டை விட தேர்ச்சி விழுக்காட்டை அதிகப்படுத்திய 262 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

நன்னிலம் ஒன்றியத்தில் விவசாயிகள்  சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

திருவாரூர், மே 30-  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பேரவை கூட்டம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அலுவலகத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு தலைவர் எம்.ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ். தம்புசாமி துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எம்.சேகர் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி நிறைவுரையாற்றினார். சிபிஎம் நன்னிலம் ஒன்றியச் செயலாளர் தியாகு.ரஜினிகாந்த், மாவட்டக்குழு உறுப்பினர் கே.தமிழ்செல்வி ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், தலைவராக வரத. வசந்தபாலன், செயலாளராக எம். ராமமூர்த்தி, பொருளாளராக எஸ். தங்கராசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

ஜெயங்கொண்டம் வாரச்சந்தையில் குப்பை கழிவுகளை நிரப்பி  தளம் அமைப்பதாக  பொதுமக்கள் குற்றச்சாட்டு

அரியலூர், மே 30-  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அருகே, வாரச்சந்தையில் வார சந்தைக்கு புதிதாக கொட்டகை அமைக்கும் பணி ரூ. 3 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.  இதில் ஒப்பந்ததாரர்கள் தரமான மண்ணைப் போட்டு தளம் அமைக்காமல் தரமற்ற முறையில் சாக்கடை கழிவு மணலைக் கொண்டு நிரப்பி, தளம் அமைத்து வருகின்றனர்.  இதனால், மழை மற்றும் காற்றுக் காலங்களில் கொட்டகை விழுந்து உயிர் பலி ஏற்படும் அபாய சூழல் உள்ளது. எனவே, தரமான மண்ணைக் கொட்டி, முறையாக தளம் அமைத்து வாரச்சந்தை கொட்டகையை அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல் மற்றும் ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர், சம்பந்தப்பட்ட வாரச்சந்தை கொட்டகை அமைக்கும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நகைக்கடன் பெறுவதற்கான நிபந்தனையை  திரும்பப் பெற வேண்டும் குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு

தஞ்சாவூர், மே 30–  தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.  கூட்டம் துவங்கியதும், ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நகைக் கடன் நிபந்தனைகளை திரும்ப பெற வேண்டும். விவசாயிகள், ஏழைகளை வஞ்சிக்கும் செயலை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும் எனக் கூறி, கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். பிறகு, ஒன்றிய அரசையும், ரிசர்வ் வங்கியையும் கண்டித்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முழக்கமிட்டனர். தொடர்ந்து கூட்டத்தில் விவசாயிகள் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் அதிகளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னையில் அதிகளவிலான பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த தமிழக அரசு பூச்சியியல் ஆய்வாளர்களை கொண்டு ஆராய்ச்சியை நடத்த வேண்டும். இது தொடர்பாக வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் புதிய மையம் ஏற்படுத்த வேண்டும்.  நகை கடனுக்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் உடனே ரத்து செய்து, பழைய முறையில் நகைக் கடன் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நகைக் கடன் மானியத்தை வழங்க வேண்டும். ரிசர்வ் வங்கி நகை கடன் குறித்து அறிவித்துள்ள நிபந்தனைகளை திரும்ப பெற வேண்டும். அரசு தொடக்க வேளாண் கூட்டுறவு மூலம் நகை கடன் கொடுப்பதில் ரிசர்வ் வங்கி நிபந்தனையை பின்பற்றப்படமாட்டாது என தெரிவித்தனர்.