tamilnadu

img

போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.21-  15 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி முடிக்க வேண்டும். 1.4.2003-க்கு பின் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெறும் நாள் அன்றே ஓய்வு கால பண பலன்களை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவுபடி அகவிலைப்படி உயர்வினை நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, டி.டி.எஸ்.எப், டி.என்.எஸ்.டி.சி, எஸ்.இ.டி.சி மற்றும் ஓய்வு பெற்றோர் அமைப்புகள் சார்பில், திங்களன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருச்சி புறநகர் கிளை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மண்டலத் தலைவர் சிங்கராயர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி எஸ்.இ.டி.சி மாநிலத் தலைவர் அருள்தாஸ், மண்டல பொதுச்செயலாளர் மாணிக்கம், ஓய்வு பெற்றோர் சங்க ராமதாஸ், சிவானந்தம், ஏ.ஐ.டி.யு.சி மாநில சம்மேளன பொருளாளர் நேரு துரை, மண்டலப் பொதுச் செயலாளர் சுந்தர்ராஜ், மண்டல பொருளாளர் கார்த்திகேயன், டிடிஎஸ் எப் மாநில அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார், ஓய்வு பெற்றோர் அமைப்பு சம்பத் ஆகியோர் பேசினர். முடிவில் சிஐடியு மண்டல துணைப் பொதுச்செயலாளர் முருகன் நன்றி கூறினார்.  புதுக்கோட்டை   போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான 15-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி ஓய்வு பெற்றோர் சங்கங்களின் சார்பில் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக மண்டலத் தலைவர் கே.கார்த்திக்கேயன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் சிஐடியு சங்க நிர்வாகிகள் எஸ்.சாமிஅய்யா, எம்.முத்துக்குமார், பி.செந்தில்நாதன், இராமசாமி, அண்ணாத்துரை, ஏஐடியுசி நிர்வாகிகள் டி.எம்.கணேசன், பி.மணிவண்ணன், ராஜா, கே.நாராயணன் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான 15-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை விரைந்து பேசி முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.