tamilnadu

img

ரயில்வே தேர்வர்களின் சுமையைக் குறைக்க, வெளிமாநில தேர்வு மையங்களுக்கு சிறப்பு இரயில்களை இயக்குக - சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை

ரயில்வே தேர்வர்களின் சுமையை குறைக்க, வெளிமாநில தேர்வு மையங்களுக்கு சிறப்பு இரயில்களை இயக்க வேண்டும் என ரயில்வே அமைச்சரை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

ரயில்வே நிலைய அதிகாரி 601 காலியிடங்களுக்கான இரண்டாம் நிலை தேர்வு வெளிமாநிலங்களில் வைக்கப்பட்டிருப்பதை விமர்சித்து ரயில்வே தேர்வு வாரிய தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

அதனடிப்படையில் ரயில்வே அதிகாரிகள் என்னிடம் நிலைமையை விளக்கினார்கள். முந்தைய முதல்நிலை தேர்வு பல நாட்கள் பல கட்டங்களாக நடத்தப்பட்டன. இதனால் ஒரு தனி விண்ணப்பதாரரின் தகுதியை தீர்மானிக்க நார்மலைசேஷன் (Normalisation) என்ற வழியை பின்பற்ற வேண்டி இருந்தது.

இவ்வழிமுறையால் ஒருவர் பெற்ற உண்மையான மதிப்பெண்கள் கணக்கில் எடுக்க முடியாமல் இருந்தது. வெவ்வேறு தேதிகளில் வெவ்வேறு வினாத்தாள்கள் அமைகிறது,

வினாத்தாள்களின் வேறுபாடு திறமையான போட்டியாளர்களை மேலும் கீழுமாக இறக்கிவிடுகிறது. இதனை தவிர்க்க ஒரே கேள்வித்தாளில் ஒரே நாளில் தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.

அந்த கோரிக்கையை ஏற்கும் விதமாகத்தான் இப்போது இந்த இரண்டாம் நிலை தேர்வு ஒரே நாளில் அதாவது மே 9 அன்று ஒரே கேள்வித்தாளில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் தேர்வர்களின் மதிப்பெண் உண்மையான மதிப்பெண் அடிப்படையில் அவர்களுடைய தகுதி தரப்பட்டியல் தீர்மானிக்க வழி ஏற்படுகிறது. இவ்வாறு செய்யும் போது அதிக மையங்கள் தேவைப்படுகின்றன.

நார்மலைசேஷனை தவிர்க்கவும் விண்ணப்பதாரரின் உண்மையான தகுதியை மதிப்பிடவும் ஒரே நாளில் தேர்வு வைக்கும் நோக்கில் இந்தத் தேர்வுகள் பல மாநிலங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அருகிலுள்ள நகரங்களிலேயே மையம் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

பெண்களுக்கு மாநிலத்துக்கு வெளியே தேர்வு மையம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதை நான் சுட்டிக்காட்டிய போது, அடுத்த தேர்வில் சொந்த மாநிலத்திலேயே மையம் நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதியளித்தார்கள்.

தேர்வுக்கு சில நாட்களிலே இருக்கும் இந்த சூழலில் தேர்வர்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு சிறப்பு ரயில்களையோ அல்லது சிறப்பு ரயில் பெட்டிகளையோ, முக்கியமான நகரங்களிலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து தேர்வு நடக்கும் மையங்களுக்கு அல்லது நகரங்களுக்கு ஏற்பாடு செய்ய ரயில்வே அமைச்சரை நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த கோரிக்கை இன்றைய சூழலில் மிக முக்கிய தேவையாகும். எனவே ரயில்வே அமைச்சர் இதனை நிறைவேற்றத்தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;