திருவாரூர் தமுஎகச மாவட்ட நிர்வாகிகள் நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்து கோரிக்கை
திருவாரூர், ஜுன் 10- திருவாரூர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டக்குழு சார்பாக சிபிஐ கட்சியின் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜை நேரில் சந்தித்து, கீழடி அகழாய்வின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வறிக்கையை ஒன்றிய அரசு வெளியிடக் கோரி கடிதம் அனுப்புமாறு கேட்டுக்கொண்டனர். நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் கோரிக்கையின் தன்மையை உணர்ந்து உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினரும், ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சருமான கஜேந்திர சிங் ஷேக்வாட்-க்கு கடிதம் எழுதி பதிவு தபாலில் உடனடியாக அனுப்பி வைத்தார். சந்திப்பின்போது மாவட்ட தலைவர் மு.செளந்தரராஜன், மாவட்டச் செயலாளர் முனைவர் ஜீ. வெங்கடேசன், திருவாரூர் கிளைச் செயலாளர் பொன். மகாலிங்கம், ஆரூர்.பக்கிரிதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநில முடிவின்படி, இக்கோரிக்கையை வலியுறுத்தி மண்டல அளவில் நடைபெறும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சியில், வரும் 13 ஆம் தேதி தொடர் முழுக்க போராட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.