tamilnadu

img

திருநர் சமூகப் பிரச்சனைகளும் கோரிக்கைகளும் - உ. வாசுகி ,மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

விழுப்புரத்தில் இன்று (05.11.22) திருநர் சமூக பிரச்சனைகள் குறித்த ஒரு கலந்துரையாடல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்று பாலினம், மூன்றாம் பாலினம் எனப் பல்வேறு பெயர்களால்  அழைக்கப் படும் திருநர் சமூகம் எண்ணற்ற பிரச்னைகளை சந்திக்கும் சமூகமாக இருக்கிறது. கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது, திருநங்கை, திருநம்பி என்ற பெயர்களை முன்மொழிந்து, இரு பகுதியினரும் சேர்ந்து ‘திருநர்’ என்ற பெயர் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது.  2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தமிழகத்தில் 22364 திருநர்கள், 1289 குழந்தைகள் உண்டு. அவர்களில் 4203 பட்டியலினத்தவர், 180 பழங்குடியினத்தவர். திருநர் அமைப்புகளோ, தற்போதைய எண்ணிக்கை இரண்டு லட்சம் இருக்கும் என மதிப்பீடு செய்கின்றனர். சென்னையில் மட்டும் 40000 பேருக்கும் மேல் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

 வழக்கமானது, இயல்பானது என சமூகம் வைத்திருக்கும் பிம்பத்துக்கு மாறாக எது நடந்தாலும் அதனைப் பலர்  ஏற்பதில்லை. ஆணாகவோ, பெண்ணா கவே பிறந்து, பிறந்த பாலினமாகவே உணர்ந்து அதையே அடையாளமாகக்  கொண்டவர்கள் சிஸ் ஜெண்டர் (cisgender) எனப்படுவார்கள். பிறந்த பாலினத்துக்கு மாறாக வேறொரு பாலினமாக உணர்ந்து, அதாவது பிறப்பில் ஆணாக இருந்து, ஆனால் பெண்ணாக உணர்ந்து பெண்ணாகப் தன்னை அடையாளப்படுத்து பவர்கள் உண்டு; பெண்ணாகப் பிறந்து ஆணாக அடையாளப்படுத்துபவர்களும் உண்டு. இவர்கள் டிரான்ஸ் ஜெண்டர் (transgender) என அழைக்கப்படுகின்றனர். இதில் தவறோ, குற்றமோ எங்கிருந்து வருகிறது? ஏன் சம உரிமை மறுக்கப்பட வேண்டும்? கேலிக்கும், கிண்டலுக்கும்  ஏது இடம்? பெரும்பான்மை சிஸ் ஜெண்டராக இருப்பதால், வேறுபட்ட பாலின உணர் வாளர்களை அசாதாரணமானவர்களாக ஏன் ஒதுக்கி வைக்க வேண்டும்? 

இந்தியாவில் திருநர்களுக்கு 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் அங்கீகாரம் கிடைத்தது. ஒருவரது பாலின ஈர்ப்பு என்பது அவரின் தனித்துவமான குணநலன், கண்ணியம் மற்றும் சுதந்திரத்தின் பிரிக்கவியலாத அங்கமாகும் என்று உச்சநீதிமன்றம் தெளிவு படுத்தியது. தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (எதிர்) இந்திய அரசு – வழக்கினில் திருநர்களை மூன்றாம் பாலினத்தவர்களாக உச்சநீதிமன்றம் அடையாளப்படுத்தியது. அரசியல் சட்ட பிரிவுகள் 14,15,16,19,21 அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தை உறுதி படுத்துகிறது என்பதையும் முன் வைத்தது.  2014 உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்,  2016ல் திருநர் உரிமைக்கான முதல் சட்ட முன்வடிவு துவங்கி 2019-20 வரை பல மாற்றங்களும், திருத்தங்களும் செய்யப்பட்டு 2019 திருநர் உரிமைகள் சட்டம் கொண்டு வரப்பட்டது, ஆயினும், திருத்தப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் உள்ளதாக செயல்பாட்டாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். 

திருநர் சமூகம் சந்திக்கும் பிரச்சனைகள்:

மனிதர்களாக மதிக்கப்படுவதற்கும், கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்குமான போராட்டத்தை முதலில் துவக்க வேண்டியிருக்கின்றது. நாள்தோறும் அன்றாட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும்  ஏச்சுக்களையும், அவதூறுகளையும், துன்புறுத்தல்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. திருநர்களை இச்சமூகம் சந்தேகக் கண் கொண்டே பார்க்கிறது. பண்பாட்டு ரீதியாக திருநர் சமூகம் பொது நீரோட்டத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளது. வாடகைக்கு வீடு, வேலை வாய்ப்பு கிடைப்பதில் பிரச்சனைகள் உள்ளன. காவல்துறையின் துன்புறுத்தல் அதிகம் உள்ளது. பாலியல் கொடுமைகளை சந்திக்க வேண்டியுள்ளது. கல்வி நிலையங்களில் பாகுபாடும், துன்புறுத்தலும் இருப்பதால் பாதியிலேயே படிப்பை விட வேண்டியுள்ளது. மருத்துவ உதவி கிடைப்பதில் சிரமம் உள்ளது. பால்மாற்று அறுவை சிகிச்சை கிடைப்பதில்  அரசு மருத்துவமனையில் நீண்ட கால தாமதம் ஆகிறது. தனியார் மருத்துவமனை என்றால் அதிக பணச் செலவு ஆகிறது.

கழிப்பறை பிரச்சனை பெருமளவு உள்ளது.  ரேஷன் கார்டு, ஊரக வேலை உறுதி திட்ட வேலை அட்டை கிடைப்பதில் சிரமம் உள்ளது. திருநர் அடையாள அட்டை கிடைப்பதில் ஏகப்பட்ட பிரச்சனை நிலவு கிறது. நிர்ப்பந்தத்தின் காரணமாக பிச்சை எடுப்பது, பாலியல் வணிகத்தில் தள்ளப் படுவது போன்றவை நடக்கின்றன. திருமணம், விவாகரத்து, தத்து எடுப்பது, சொத்தில் பங்கு போன்ற சிவில் உரிமைகள் சட்டரீதியாகக் கிடைப்பதில் சிரமங்கள் உள்ளன. பெற்றோரும், உறவினர்களும், நண்பர்களும் கைவிட்டு விடும் நிலையில் ஆதரவு ஏற்பாடும், உளவியல் ஆலோசனை களும்  தேவைப்படுகின்றன.

இன்றைய சூழல்

மற்ற பகுதியினர் போலவே, திருநர் பிரச்சனைகளை மட்டும் தனித்துப் பேச முடியாது. ஏனெனில் நாம் வாழும் சமூக சூழலுக்கு உட்பட்டே  இப்பிரச்சனைகள் அமைந்துள்ளன.  பொருளாதார ஏற்றத் தாழ்வு, சாதிய பாகுபாடு, பாலின பாகுபாடு, அனைவரையும் பாதிக்கிற மனித உரிமை பிரச்சனைகள், வாழ்வாதார பிரச்சனைகள், ஜனநாயக உரிமை பறிப்பு என அனைத்துமே திருநர்  சமூகத்தை பாதிக்கின்றன. இத்தகைய பிரச்சனைகளுக்கு காரண மாக நவீன தாராளமயக் கொள்கைகள் உள்ளன. மோடி அரசின் இத்தகைய தவறான கொள்கைகளின் தாக்கம், மற்ற பகுதியினரை விட திருநர் மீது கூடுதலாகவே பாய்கிறது.  எனவே திருநர் சமூக பிரச்சனைகளை இன்றைய அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு சூழலுடன் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

அரசு நடவடிக்கைகள்:

கேரள மாநிலம் தான் முதன் முதலில் (2016)  திருநர் சமூகத்துக்கென தனி கொள்கையை உருவாக்கியது. ரியா என்ற திருநங்கை  செயல்பாட்டாளரை லோக் அதாலத் நீதிபதியாக நியமித்தது,  அரசு மருத்துவமனைகளில்  திருநர்களுக்கான அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப் பட்டு ரூ. 2 லட்சம் வரை நிதி உதவியும் தரப்படுவது, கல்வியில் விடுபட்டவர் களுக்கு  தொடர் கல்வி,  24 மணி நேர உதவி எண், கேரள பெண்கள் மேம்பாட்டு கழகம் மூலமாக சுய தொழில் தொடங்க மூன்று லட்சம் ரூபாய் வரை கடன்,  திருமண நிதி உதவி ரூ. 30000, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடப் பிரிவிலும்  திருநர் சமூகத்துக்கு என கூடுதல் இடங்கள் ஒதுக்குவது போன்ற நடவடிக்கைகள் கேரளாவில் எடுக்கப்படுகின்றன. கேரளாவுக்குப் பின்னர் ஆந்திரா, தெலுங்கானாவிலும் தனிக்கொள்கை உருவாக்கப்பட்டது.

தமிழகத்தில்...

தமிழ்நாடு  2008லேயே தனி நல வாரியத்தை உருவாக்கியது. இடையில் அது முடங்கி விட்டது. தற்போது, திமுக ஆட்சியில் மீண்டும் அது புதுப்பிக்கப்பட்டுள்ளது. பல குறிப்பிடத் தகுந்த உத்தரவுகள் கலைஞர் ஆட்சியின் போதும், பிறகும் பிறப்பிக்கப்பட்டன. பாலின அடையாளம் குறிப்பிட வேண்டிய இடங்கள் அனைத்திலும் ஆண் பெண் என்ற பிரிவுடன் சேர்த்து மூன்றாம் பாலினம் என்கிற பிரிவு இணைக்கப்படுவது, திருநர்கள் இந்த மூன்றில் எதை வேண்டு மானாலும் பாலினமாக தேர்வு செய்து கொள்ளலாம் என்ற உரிமை, சாதிச் சான்றிதழ் பெற்றிராத திருநர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினராக கருதப்படுவர் என்கிற வழிகாட்டுதல், தமிழ்நாடு திருநர் நல வாரியம் வழங்கும் அடையாள அட்டைகளை கொண்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது, திருநர் களுக்கு எதிரான வன்முறைகளை கண்டறிய மாவட்டக் குழுக்கள் அமைப்பது, குற்றம் நடந்தால் 24 மணி நேரத்துக்குள் உதவி கிடைக்க ஏற்பாடு செய்வது, சட்ட உதவி மையங்களுடன் தேவையான ஒருங்கிணைப்பு, திருநர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சுயதொழில் செய்வதற்கான கடன் தொகை 20 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டிருப்பது, 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநர் களுக்கு மாத உதவித் தொகையாக ஆயிரம் ரூபாய், கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிதி உதவி, திருநர்கள்  திருமணங்கள்  பதிவு செய்வதற்கான ஏற்பாடு போன்றவற்றுக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.  அண்மையில், திருநருக்கான. தனிக் கொள்கை வகுப்பதாகத் தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார்.  கர்நாடகம் மற்றும் பீகாரில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு 1 சதவிகிதம் உண்டு.

பல்வேறு தன்னார்வ அமைப்புகள் திருநர் நலனுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பல்வேறு துறைகளில் முத்திரை பதிப்பவர்களாகவும், சமூக செயற்பாட்டாளர்களாகவும் திருநர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களோடும் ஒருங்கிணைப்பு செய்து திருநர் சமூகத்தின் கோரிக்கைகளுக்கான அரசியல் அழுத்தத்தை கொடுக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. அதற்கான முன்னோட்ட மாகவே விழுப்புரத்தில் மாநில அளவிலான இந்த கலந்துரையாடல் நடைபெறுகிறது.

கோரிக்கை வகுத்து முன்னேறுவோம்!